தமிழ்நாடு

ஒரு தலைமுறையின் கனவை நினைவாக்கிய கலைஞரின் 5 மதிப்பெண்கள் திட்டம் - கல்வி வரலாற்றில் அழியாத சாதனை!

இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளில், அவரது அரசியல் சாதனைகளுடன் கல்வி மற்றும் சமூகநீதிக்காக அவர் கொண்டு வந்த திட்டங்களும் மீண்டும் நினைவுகூரப்படுகின்றன.

ஒரு தலைமுறையின் கனவை நினைவாக்கிய கலைஞரின் 5 மதிப்பெண்கள் திட்டம் - கல்வி வரலாற்றில் அழியாத சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் இவ்வாறு பெருமையுடன் நினைவுகூரப்படும் திட்டங்களில் ஒன்றுதான், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கூடுதல் 5 மதிப்பெண்கள் வழங்கும் திட்டமாகும். முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், சமூகநீதியை கல்வியின் வழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு முன்னோடியான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது, குடும்பத்தில் முதல் பட்டதாரியாக உருவாகும் மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் சேருவதற்காக 5 கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் திட்டமாகும்.

இதற்காக 1990 மே 10-ஆம் தேதி கல்வித்துறை அரசாணை எண் 638 (G.O. Ms. No. 638) வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின்படி, மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் சேரும் மாணவர்களில், குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பவர்களுக்கு 5 கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் உருவான பின்னணியும் சமூகநீதியின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அன்றைய காலகட்டத்தில், கிராமப்புறங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலும் உயர்கல்வி என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது. திறமை இருந்தாலும், சில மதிப்பெண்கள் குறைவால் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளில் சேர முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் கனவுகளை இழந்தனர்.

ஒரு தலைமுறையின் கனவை நினைவாக்கிய கலைஞரின் 5 மதிப்பெண்கள் திட்டம் - கல்வி வரலாற்றில் அழியாத சாதனை!

அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், "குடும்பத்தில் முதல் பட்டதாரி உருவானால் அந்த குடும்பத்தின் எதிர்காலமே மாறும்" என்ற சமூகப் பார்வையுடன் இந்தத் திட்டத்தை கலைஞர் அரசு அறிமுகப்படுத்தியது. இந்த 5 கூடுதல் மதிப்பெண்கள் காரணமாக, பல ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் தொழில்முறை கல்லூரிகளில் இடம்பிடித்தனர். அவர்கள் பெற்ற பட்டம், தனிப்பட்ட சாதனையாக மட்டும் இல்லாமல், அவர்களது குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது.

முதல் தலைமுறை பட்டதாரி உருவான பிறகு, அதே குடும்பத்தில் அடுத்த தலைமுறையினரும் உயர்கல்வியை நோக்கி பயணிக்கத் தொடங்கினர். "எங்கள் வீட்டிலும் மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், அரசு அதிகாரி உருவாக முடியும்" என்ற நம்பிக்கை ஆயிரக்கணக்கான குடும்பங்களில் வேரூன்றியது.

இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் ஏராளமானோர், அந்தக் காலத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் உயர்கல்விக்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கல்வி வாய்ப்பில் இருந்த ஏற்றத்தாழ்வை குறைத்து, சமூக முன்னேற்றத்திற்கு கல்வியை கருவியாக மாற்றிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான், இந்த 5 கூடுதல் மதிப்பெண்கள் வெறும் கல்விச் சலுகையாக அல்லாமல், சமூகநீதியை நடைமுறைப்படுத்திய ஒரு முக்கியமான அரசுக் கொள்கையாக பலரால் நினைவுகூரப்படுகிறது.

பின்னர், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சலுகைகள் காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு மாற்றங்களுடன் தொடர்ந்தன. தற்போது இந்தச் சான்றிதழ் கல்விக் கட்டணச் சலுகைகள், சில அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டிலும் அரசு வேலைவாய்ப்புகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

"ஒரு தலைமுறையின் கல்விக் கனவை, வெறும் 5 மதிப்பெண்கள் நனவாக்கின" என்ற வாசகம், இந்தத் திட்டத்தின் தாக்கத்தை மிகத் துல்லியமாகச் சொல்கிறது. சில அரசுத் திட்டங்கள் ஒரு தலைமுறையை மட்டுமே தொடும். ஆனால் சில திட்டங்கள் தலைமுறைகளை மாற்றும். முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான 5 கூடுதல் மதிப்பெண்கள் திட்டம், அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சமூகநீதித் திட்டங்களில் ஒன்றாக கல்வி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

ஒரு தலைமுறையின் கனவை நினைவாக்கிய கலைஞரின் 5 மதிப்பெண்கள் திட்டம் - கல்வி வரலாற்றில் அழியாத சாதனை!

கல்வி என்பது வசதி படைத்தோரின் உரிமை மட்டுமல்ல; வாய்ப்பில்லாதவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையை அரசின் கொள்கையாக மாற்றிய அந்த முடிவு, இன்று வரை ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் நன்றியுடன் நினைவுகூரப்படும் ஒரு சமூகநீதி மைல்கல்லாகத் திகழ்கிறது.

இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளில், அவரது அரசியல் சாதனைகளுடன் கல்வி மற்றும் சமூகநீதிக்காக அவர் கொண்டு வந்த திட்டங்களும் மீண்டும் நினைவுகூரப்படுகின்றன. வெறும் நிர்வாக உத்தரவாக இல்லாமல், ஆயிரக்கணக்கான முதல் தலைமுறை மாணவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அந்த 5 கூடுதல் மதிப்பெண்கள் திட்டம், கலைஞரின் சமூகநீதிச் சிந்தனையின் உயிரோட்டமான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான், அவரது நினைவு நாளில் அரசியல் தலைவரை மட்டுமல்ல, ஏழை மற்றும் எளிய மக்களின் கல்விக் கனவுகளை நனவாக்கிய சமூகநீதியின் சிற்பியையும் தமிழகம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.

banner

Related Stories

Related Stories