
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் “Umagine TN 2026” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
புதுமையான தொழில்நுட்பங்களின் மூலம், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எய்திடும் நோக்கில், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து Umagine TN என்ற உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.
2021-2022-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது யுமாஜின் (UMAGINE) எனும் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை ஆண்டுதோறும் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி Umagine TN மாநாடு 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது,
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (எல்காட்) மூலம் UMAGINE TN 2026 என்னும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் (8.01.2026 மற்றும் 9.01.2026) நடைபெறுகிறது.
இம்மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இந்த Umagine TN 2026 மாநாட்டில், Umagine 2026 Artificial Intelligence, Quantum Computing, SpaceTech, Deep Tech, Tech Leadership, Geospatial Innovation, AVGC, SaaS Leadership, குறித்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் மேம்பாடு, புத்தொழில், புத்தாக்கம் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் 500-க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள், 150-க்கும் மேற்பட்ட துறைசார் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
தொடக்க விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனக் கொள்கை 2025-26 (Tamil Nadu Deep Tech Startup Policy 2025-26) வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், EROS Gen AI, Better Compute Works Inc, Phantom Digital Effects Limited, Rewin Health, Cube84, WeLoadin Studio LLP ஆகிய நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 9820 கோடி ரூபாய் முதலீட்டில் 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.








