அரசியல்

“ஜனநாயக மாண்பை பாஜக சீர்குலைக்கிறது” - மெகபூபாவின் வீட்டுக்காவல் நீட்டிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம்!

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து இந்திய ஜனநாயகத்தின் மாண்பை மத்திய பா.ஜ.க., அரசு சீர்குலைத்துவிட்டதாக ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயக மாண்பை பாஜக சீர்குலைக்கிறது” - மெகபூபாவின் வீட்டுக்காவல் நீட்டிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு முதல் நாள் இரவில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மெகபூபா முப்தியை விடுவிப்பது குறித்து எந்த முடிவையும் காஷ்மீர் நிர்வாகம் எடுக்கவில்லை.

இந்நிலையில் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் உள்துறை நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனநாயகத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டும், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும் ஓராண்டாகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தி.மு.க. எதிர்க்கிறது என தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, மெகபூபா முஃப்தியின் வீட்டுக்காவலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அதுவும் மெகபூபா முஃப்தியின் விவகாரத்தில் இந்தியாவின் ஜனநாயக மாண்பை மத்திய பா.ஜ.க. அரசு மிக உச்ச அளவில் சீர்குலைத்துவிட்டதாக சாடியுள்ளார். மெகபூபாவை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்” என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories