
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக ராஜ்குமார் (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் நேற்று (ஜூன் 4) மாலை நேரத்தில், வழக்கம் போல் தூய்மை பணி செய்துவிட்டு ராஜ்குமார் கிளம்பியுள்ளார்.
அப்போது அங்கே வந்த தவெக நிர்வாகி உதய பிரகாஷ் என்பவர், ராஜ்குமாரை அழைத்து, வேறொரு ஊராட்சியான பழையனூர் ஊராட்சி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு தூய்மை பணியாளர் ராஜ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகி உதய பிரகாஷ் மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட 3 பேர், தூய்மை பணியாளர் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் வசைப்படியுள்ளனர்.

மேலும் அவரை அடித்து துன்புறுத்தி, காயப்படுத்தியுள்ளனர். இதனால் மனவேதனையுடன் காயமடைந்த தூய்மை பணியாளர் ராஜ்குமார், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராஜ்குமார், தவெக நிர்வாகி உதய பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.
எனினும் சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும், காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. 53 வயதான தூய்மை பணியாளரை தாக்கிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொத்தங்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம், சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொள்வதற்கு முன்பு அங்கிருந்த காலணிகளை பெண் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கையால் அப்புறப்படுத்திய நிகழ்வு கடும் கண்டனங்களை பெற்ற நிலையில், தற்போது தவெக நிர்வாகி தூய்மை பணியாளரை தாக்கியது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






