முரசொலி தலையங்கம்

”தலைவராக எதிர்த்து; முதல்வராக தொடுத்தார்” வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைவராக இருந்து எதிர்ப்புக் கனலை மூட்டினார். முதல்வராக இருந்து அக்கனலுக்கு சட்ட வடிவம் கொடுத்தார் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

”தலைவராக எதிர்த்து; முதல்வராக தொடுத்தார்” வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூன்று வேளாண் சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்த போராட்டங்கள் சாதாரணமானது அல்ல!

மூன்று சட்டங்களின் மிக மோசமான பிரிவுகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லி தமிழகத்தை போராட்டக் களமாக ஆக்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனதும், ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

தலைவராக இருந்து எதிர்ப்புக் கனலை மூட்டினார். முதல்வராக இருந்து அக்கனலுக்கு சட்ட வடிவம் கொடுத்தார்!

ஒரு சட்டம் நிறைவேறிய பிறகு அதனைப் பலரும் எதிர்த்த பிறகு, நாமும் சேர்ந்து எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் அத்தகைய சட்டம் வரும் போதே, அது முறையற்ற சட்டம் என உணர்ந்து ஆரம்பத்திலேயே எதிர்ப்பதுதான் முக்கியமானது. அந்த எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு, அமைதியாக இருந்துவிடாமல் அத்தகைய எதிர்ப்பை தொடர்ந்து காட்டி அந்த எதிர்ப்பில் உறுதியாக இருப்பதுதான் அதைவிட முக்கியமானது. அத்தகைய உறுதியுடன்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்தார்கள்.

கடந்த ஓராண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எத்தகைய உறுதியுடன் இருந்தது என்பதை பத்திரிகையாளர் பரக்கத் அலி தொகுத்து வழங்கி இருக்கிறார்.

1. மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது தி.மு.க. எம்.பி.-கள் எதிர்த்து வாக்களித்தார்கள்.

2. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 2020 டிசம்பரில்சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது தி.மு.க.! இதற்காக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது 4 பிரிவுகளில் பழனிசாமி அரசு வழக்குப் பதிவு செய்தது.

3. 2020 டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற நாடு தழுவிய பாரத் பந்த்தில் திமுக பங்கெடுத்தது.

4. சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டி, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றக் கோரி, முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

5. குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கும் தமிழகத்தில் விவசாயிகள் நடத்தும் பேரணி, ஒன்று கூடல்களுக்கும் தி.மு.க. முழு ஆதரவு அளித்தது.

6. குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அதனைக் கண்டித்து அறிக்கை விட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

7. டெல்லியில் போராடும் விவசாயிகளை தி.மு.க. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து ஆதரவு தெரிவித்தது.

8. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து -தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

9. "விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதற்காக எந்த வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயார்’’ என்று சொன்னார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

10. வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய போது அதனை எதிர்த்து மசோதா நகல்களைக் கிழித்து எறிந்து எதிர்ப்புத் தெரிவித்தார் தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா.

11. சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என உறுதி அளிக்கப்பட்டது.

12. மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தனித்தீர்மானத்தைச் சட்டசபையில் முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டத்தைத் திரும்பப் பெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13. வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று 9 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

14. 2021 மே 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய நாடு தழுவிய ‘பந்த்'-க்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.

15. விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என்ற டூல்கிட்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததற்காக சுற்றுச் சூழலாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். "திஷா ரவியைக் கைது செய்து கொடுங்கோல் வழியில் அடக்கியது அதிர்ச்சியளிக்கிறது" என மு.க.ஸ்டாலின் கண்டித்தார்.

16. ‘வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் மனு அளித்தனர்.

17. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு "வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்" என அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை. வெளியிடப்பட்டது.

18. "காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களிலும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக - கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக" என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

19. வேளாண் சட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

20. ‘விவசாய சட்டத்தால் தென்னிந்தியாவில் பிரச்சினை இல்லை’என்ற அட்டர்னி ஜெனரல் கருத்துக்கு தி.மு.க. எம்.பி. வில்சன் மூலம் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி. இந்த உறுதிதான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்!

"விவசாயிகளின் நலன்களை என்றென்றும் பாதுகாத்திடவும், அவர்தம் வாழ்வு செழிக்கவும், வேளாண்மை என்பது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடாமலும் தடுக்கவும் மூன்று வேளாண் சட்டங்களை நிராகரிக்க வேண்டும்" என்ற தீர்மானம்தான் இன்று ஒன்றிய அரசைப் பணிய வைத்துள்ளது!

banner

Related Stories

Related Stories