இந்தியா

“பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தும் பா.ஜ.க அரசு” - கே.எஸ்.அழகிரி சாடல்!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ளதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

“பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தும் பா.ஜ.க அரசு” - கே.எஸ்.அழகிரி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது முதற்கொண்டு, முதல் அலையின் போது அதை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க அரசு தவறிவிட்டது. அதனால், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். உற்றார் உறவினர், நண்பர்கள் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு ஒவ்வொரு வீடுகளிலும் அழுகுரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் காதுகளில் விழாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், ஜனவரி 16, 2021 இல் தொடங்கி இதுவரை ஒரு நாளைக்கு சராசரி 50 லட்சம் என்றளவில் ஜூன் 23 ஆம் தேதி வரை 29 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 18 சதவிகிதம். இதில் இரண்டு டோஸ் போட்டவர்கள் 5 கோடி பேர். இது மக்கள் தொகையில் வெறும் 3.8 சதவிகிதம் மட்டுமே. பிரிட்டனில் மொத்த மக்கள் தொகையில் 2 டோஸ் போட்டவர்கள் 45.8 சதவிகிதம். அமெரிக்காவில் 44.6 சதவிகிதம். ஜெர்மனியில் 30.2 சதவிகிதம். நம்மைப் போல மக்கள் தொகை கொண்ட சீனாவில் இதுவரை 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு ஒரு நாளைக்கு 1 கோடியே 83 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சீனாவில் சாத்தியமாகிற போது, இதை இந்தியாவில் ஏன் சாதிக்க முடியவில்லை? மேலும் 111 உலக நாடுகளில் தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையில் இந்தியா 63-வது இடத்தில் தான் இருக்கிறது. அதேநேரத்தில், உலக நாடுகளில் 275 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட 94 கோடி இந்திய மக்களுக்கு 188 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடுவதன் மூலமே கொரோனாவின் பிடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், இரண்டு தனியார் நிறுவனங்களின் மொத்த தடுப்பூசி உற்பத்தி மாதத்திற்கு 8.5 கோடி தான். இந்நிலையில், ஒரு நாளைக்கு 80 லட்சம் முதல் 1 கோடி தடுப்பூசிகள் போட்டால் தான் வருகிற டிசம்பர் 2021-க்குள் அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட முடியும். இதை எதிர்கொள்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதைய தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையைப் பார்க்கிற போது மத்திய அரசின் இலக்கின்படி,100 சதவிகித மக்களுக்கு டிசம்பர் 2021-க்குள் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பே இல்லை. இதேபோக்கு நீடித்தால் தடுப்பூசி இலக்கை 2024 இல் தான் எட்ட முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால், இந்திய மக்கள் அச்சம், பீதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய பா.ஜ.க. அரசு முற்றிலும் தவறிவிட்டது.

“பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தும் பா.ஜ.க அரசு” - கே.எஸ்.அழகிரி சாடல்!

அதேநேரத்தில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2021 ஆம் ஆண்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 7 கோடியே 50 லட்சம் பேர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவின் வலுவான 10 கோடி நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் முந்தைய 5 ஆண்டுகளில் அடைந்த பலனை இழந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை பெருக்கவோ, பொருளாதார பேரழிவைத் தடுக்கவோ முற்றிலும் தவறிவிட்டார்.

கொரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பா.ஜ.க அரசு நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. கடந்த ஏழாண்டுகால பா.ஜ.க. ஆட்சி, பெட்ரோல், டீசல் மீது கலால் வரியாக ரூபாய் 25 லட்சம் கோடி வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் மீது இத்தகைய தாக்குதலை மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த அரசும் தொடுக்காது. இதனால், மக்கள் வாங்குகிற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணவீக்கமும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories