தி.மு.க

“ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தரப்போறாரு” : இது பாடல் அல்ல; தமிழினத்தின் தேடல்! - சிலந்தி கட்டுரை!

<b>படை நடத்தும் நம் தலைவன் வகுக்கும் வியூகங்களில் சிக்கி விழி பிதுங்கத் தொடங்கிவிட்டனர் எதிரிகள் என முரசொலி நாளேட்டில் சிலந்தி கட்டுரை வெளியாகியுள்ளது.</b>

“ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தரப்போறாரு” : இது பாடல் அல்ல; தமிழினத்தின் தேடல்! -  சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’அது நிகழ்ச்சி அல்ல; நெகிழ்ச்சி! வஞ்சக வல்லூறுகளால் தாக்கப்படும் கோழிக் குஞ்சுகள் தாயிடம் அடைக்கலம் தேடி ஓடி வருவது போல, பூதாகாரப் பேரிருளில் சிக்கியவர்கள் எதிரே தென்படும் ஒளிக்கீற்றை நோக்கிப் பாய்ந்து வருவது போல, சுட்டெரிக்கும் வெயிலில் வாட்டப்பட்டவர்கள், நிழல் தரும் மரத்தைக் கண்டு மகிழ்ந்து அதனை நோக்கி விரைவது போல, அலை அலையாய் அணி வகுத்து ஆணும் பெண்ணுமாய், சிறார் முதல் முதியோர் வரை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மொய்த்திருக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது!

நாற்றமிகு லஞ்ச லாவண்ய - அடிமை ஆட்சி அகற்றி, ஏற்றமிகு தமிழகத்தை மீட்டெடுக்க கிடைத்துள்ள ஆற்றல்மிகு தலைவன், அரவணைக்கும் அன்புத் தலைவன், தங்களுக்கு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், நிகழ்ச்சி நடக்கும் இடம் நோக்கி சாரை சாரையாக வந்து கூடுகின்றனர். "ஸ்டாலின்தான் வாராரு... விடியல்தரப் போறாரு..." என்ற பாடல் தமிழ் மக்களின் இதய கீதமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கிராமப்புற சிறார்கள் அவர்களே உருவாக்கிக் கொண்ட வாத்தியங்களை இசைத்து மழலை மாறா நிலையில் சாலைகளில் பாடி ஆடுகின்றனர்!

நகர்ப்புற இளைஞர்கள் இசைக்கேற்ற நடன அசைவுகளை அமைத்துக்கொண்டு ஆடிடுவதை ஆர்வமுடன் மக்கள் பார்த்து களிக்கும் காட்சிகள் தமிழ்ச் சமுதாயம் விழித்துவிட்டது என்பதற்கு சாட்சியங்கள்! போலிகளைக் கண்டு ஏமாந்த பொதுமக்களுக்கு உண்மைகளை உணர்த்தி பொய்மைகளுக்கு பாடை கட்ட, புலர்ந்துவிட்டது புதிய தமிழகம் என்ற புத்துணர்வு எங்கும் வெளிப்படத் தொடங்கிவிட்டது!

“ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தரப்போறாரு” : இது பாடல் அல்ல; தமிழினத்தின் தேடல்! -  சிலந்தி கட்டுரை!

தமிழகத்தில் எங்கெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ள ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு’ பாடல் தமிழ் மக்கள் மனதை தலைவர் ஸ்டாலின் ஆட்கொண்டு விட்டார்; அவர்களது நம்பிக்கையின் நட்சத்திரமாக, உலா வருகிறார், தமிழகத்தின் எல்லாதிக்குகளும் அவரை வரவேற்க சிகப்புக் கம்பளம் விரித்து விட்டதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. தமிழகத்தைக் கப்பியுள்ள காரிருள் அகற்ற தகத்தகாயமாகப் பிரகாசிக்கும் உதயசூரியன் தோன்றுவதைக் காண பல்லாயிரக்கணக்கில் கூடுகின்றனர்! கழகத் தலைவர் முன் பேசிய பின், தங்கள் சுமைகள் எல்லாம் இலகுவானது போன்ற முக மலர்ச்சியுடன் திரும்புகின்றனர்!

"உங்கள் மன பாரங்களை என் முதுகில் இறக்கி வைத்துவிட்டீர்கள்; நிம்மதியாகச் செல்லுங்கள். இடையிலே சில மாதங்கள்தான்! உங்கள் வாழ்வின் தடைக் கற்களாக நீங்கள் கருதியவை அகற்றப்படும்" எனத் தலைவர் கூறும் போது சோர்ந்து கிடந்த அந்த முகங்களில் ஒரு புத்தொளி தோன்றுகிறது! சோகம் கப்பிய முகத்தில் மலர்ச்சி! விடிவதற்கு முன் எழுந்து தமிழ் மக்களின் விடியலுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து சிந்தித்து சிந்தித்து செயல்பட்ட தலைவனின் மகனல்லவா! சிறப்புமிகு தமிழகம் படைத்த சீர்மிகு முதல்வரின் வழித்தோன்றல் அல்லவா!

தீயவர்கள் ஆட்சியில் சிதைந்து வரும் தமிழகத்தை சீர்தூக்கிட சபதமேற்று சுழன்று சுழன்று பணியாற்றுகிறார். வெற்றி பெற்று ஆட்சி பீடமேறிய 100 நாட்களில் நிறைவேற்றிக் காட்டுவேன்! என அளித்த வாக்குறுதிகளில் சில வெற்றி முகட்டை தொடும் முன்பே நிறைவேறத் தொடங்கியுள்ளன! "ஸ்டாலின் சொல்றார்... பழனிசாமி செய்கிறார்" என்ற கூற்று நித்தம் நித்தம் மெய்ப்படத் தொடங்கியுள்ளது! சில திரைப்படங்களின் இறுதிக் காட்சிகளில் எதிரிகளை கதாநாயகன் துவைத்து எடுத்துவிட்டு வெற்றியை நோக்கிச் செல்லும்போது, இனி இவனை வெல்வது இயலாது எனும் போக்கில், கதாநாயகன் கேட்டதை எல்லாம் அவனது எதிரிகள் எடுத்து வந்து அவனது காலடியில் வைப்பார்கள்! அதேநிலைதான்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து என தலைவர் ஸ்டாலின் அறிவிக்கிறார். முதலில் அது எப்படி முடியும் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்ற முதலமைச்சர் பழனிசாமி காதுகளில் "ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு..." பாடல் விழுகிறது. பதைபதைக்கிறார்... விவசாயக் கடன் ரத்து என அறிவித்துவிட்டார். "நகைக்கடன் ரத்து என ஸ்டாலின் அறிவிப்பது மக்களை ஏமாற்ற மிட்டாய் கொடுப்பது போல பொய் வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின்" என்றார் பழனிசாமி. இப்போது "ஸ்டாலின்தான்வாராரு... விடியல் தரப்போறாரு..." என சிறுவர்கள், தன்னிச்சையாக தாங்களே தயார் செய்து கொண்ட வாத்தியங்களை முழக்கி ஆடிபாடும் காட்சி வலைதளங்களில் வலம் வருவதைக் காண்கிறார்! அதிர்கிறார்..உடனே நகைக் கடன்கள் ரத்து என அறிவிக்கிறார்!

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு பெற்ற கடன்கள் கழக ஆட்சி மலர்ந்ததும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கிறார். "ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு..." எனும் பாடலோடு சேர்ந்த அந்த அறிவிப்பு... தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமி காதில் விழ, பதைபதைத்து எழுந்து... ‘கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய மகளிர் சுயஉதவிக் குழு கடன் ரத்து’ என்கிறார்! பழனிசாமியின் சாதனைகள் அடிக்கற்களாகவும் அறிவிப்புகளாகவும் இருக்கப் போகிறதே தவிர அது ஆக்கப்பூர்வமாக இருக்கப் போவது, வர இருக்கும் கழக ஆட்சியில்தான் நிறைவாக நிறைவேறும் என்பதைத் தெளிவாக உணர்ந்துவிட்டனர் மக்கள்.

அதைத்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலிக்கும் பாடலாக மட்டுமின்றி, தமிழக மக்களின் நம்பிக்கை கீதமாக, ஒலிக்கத் தொடங்கிவிட்டது! ஊழல் கோட்டையை உடைக்க பல கோடி உளிகள் எழுப்பும் சத்தம் எங்கும் கேட்கத் தொடங்கிவிட்டது! கொட்டமிட்ட ஊழல் பெருச்சாளிகள் சந்து பொந்துகளில் புகுந்து தப்பிக்க முயலுவது போல, கடைசி நேர அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன! அவைகளெல்லாம் அறிவிப்புகள் அல்ல; ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்.’ ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ இவைகளில் மொய்த்திடும் மக்கள் கூட்டம் உருவாக்கிய அதிர்வலைகள்! தேட்டை போட்ட ஆளும் கூட்டம் ஆட்டம் கண்டு விட்டது என்பதின் அடையாளக் குறிப்புகள்!

இனமான தமிழினத்தின் எழுச்சி கண்டு, எத்தர் கூட்டம் பித்தம் தலைக்கேறி பிதற்றத் தொடங்கிட்டது. வெற்றி நம்மை நோக்கி வீரநடைபோடத் தொடங்கி விட்டது. படை நடத்தும் நம் தலைவன் வகுக்கும் வியூகங்களில் சிக்கி விழி பிதுங்கத் தொடங்கிவிட்டனர் எதிரிகள்! தமிழினத் தலைவர் கலைஞர் குறிப்பிட்டது போல, கோட்டை கொத்தளம் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. ஈட்டிகள், வேல்கள் கூர் தீட்டப்பட்டுவிட்டன. கொடிகள், முகில் தொட்டுப் பறக்கின்றன. கொட்டும் முரசுகள் எட்டு திசையும் அதிர்கின்றன.

ஆர்த்தெழுவோம்; அராஜக ஆட்சியிலிருந்து தமிழர்களை விடுவித்திடுவோம். அந்தகார அடக்குமுறை ஊழல் அரசின் அடிமைத் தளையை அகற்றிட எழுக!... எழுகவே! "ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு..." இந்த வரிகள் பாடல் அல்ல; தமிழினத்தின் தேடல்!

banner

Related Stories

Related Stories