இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.
இதனிடையே காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின்படி, காசா மக்களை தெற்கு பகுதிக்கு இடம்பெயர வைத்து, வடக்கு காசாவை முழுவதுமாக காலவரையின்றி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் குறிப்பாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்து, ஆயுதக்குறைப்புக்கு முன்வராவிட்டால் ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்’’ என்று எச்சரித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுளது.