
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 31), பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் புத்தகங்கள் படிக்கும் விதம் திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் இரா. ஆவுடையப்பன் அவர்களிடம் 3,000 புத்தகங்களும், தாம்பரம் மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ராஜா அவர்களிடம் தாம்பரம் குளக்கரை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்திற்கு 2,000 புத்தகங்களும் வழங்கினார்.
இந்நிலையில், ’வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!” என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!" என தெரிவித்துள்ளார்.






