
”தொழில் முதலீடுகளை நாங்கள் ஈர்த்து வருகிறோம்” என ஒன்றிய அமைச்சர்கள் முதல் மாநில அமைச்சர்கள் வரை கூறுவதை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், இந்த முதலீடுகள் எப்படி ஈர்க்கப்படுகின்றன என்பது திராவிட மாடல் ஆட்சியில்தான் சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு வெளிப்படைத்தன்மையுடன், எல்லோரும் அறிந்து கொள்ளும் படி செயல்படுத்தப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்று, தமிழ்நாட்டை ஒரு தொழில் நகரமாக வளர்த்தெடுத்துள்ளார். அதனால்தான் தமிழ்நாடு இரட்டை பொருளாதார வளர்ச்சி என்ற வரலாற்று சாதனையை நோக்கி நகர்ந்தது.
சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை தி.மு.க அரசு நடத்தியது. வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை அழைத்து அவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியது. எவ்வளவு முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் அப்போதைய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள்.
ஆனால், தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனா ரீல்ஸ் வீடியோவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என்றும், தி.மு.க ஆட்சியில் முதலீட்டாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கீர்த்தனா முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் த.வெ.கவின் குற்றச்சாட்டுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். மேலும், முதலீடுகள் எப்படி ஈர்க்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தி.மு.கவினரிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று த.வெ.கவினருக்குப் பாடம் எடுத்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்று கொடுத்து இருக்கும் ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ், ”தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களிடம் அரசுத் தரப்பில் இருந்து லஞ்சம் அல்லது பணம் கேட்கப்பட்டதாக நான் ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை.
நியாயமாகச் சொல்ல வேண்டும் என்றால், தி.மு.க அரசு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் செயல்முறையை மிகவும் வெளிப்படையாகவும், தொழில்முறை நேர்த்தியுடனும் கையாண்டது. அதற்கான பாராட்டுகள் நியாயமாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
”பொய்யை ஒருநாள் உண்மை வென்றே தீரும்” என்பதற்கு நாரா லோகேஷ் பேட்டியே உதாரணமாகும்.






