
சென்னை நீலாங்கரை, சேஷாத்ரி அவென்யூவில் உள்ள வாடகை வீட்டில் பிரபல நடிகர் ரவி மோகன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டின் லாக்கரிலிருந்த ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு வைரச் சங்கிலி ஆகியவை திருடுபோயுள்ளதாக அவரது மேலாளர் கோகுல் நீலாங்கரை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, ரவி மோகன் வீட்டில் பணியாற்றி வரும் இரண்டு ஓட்டுநர்கள், ஒரு தனி உதவியாளர், பணிப்பெண் மற்றும் அவரது மகன் ஆகிய ஐந்து நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தங்களது வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் தொடர்பாக ரவி மோகன் தரப்பினர் வீட்டில் இருந்த பணிப்பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தங்களது மனைவிகளை நடிகர் ரவி மோகன் வீட்டில் சட்டவிரோதமாகப் பூட்டி வைத்துச் சிறைபிடித்திருப்பதாகப் பணிப்பெண்ணின் கணவர் தரப்பிலிருந்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அவசரப் புகார் ஒன்று வந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பணிப்பெண்களை மீட்டனர். மேலும், "யாரையும் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்துத் தனியாக விசாரணை நடத்தக் கூடாது; திருட்டுச் சம்பவம் குறித்து முறையாகப் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என ரவி மோகனுக்கு அறிவுறுத்தினர்.
காவல்துறையினரின் இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில், தற்போது நீலாங்கரை காவல் நிலையத்தில் இந்தத் திருட்டுப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






