
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஊடகத்துறையை தனது கட்டுக்குள் வைத்து தனக்கு சாதகமான செய்திகளை வெளியிட நிர்பந்திப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே போல் ஊடகத்துறையை சேர்ந்தவர்களையும் தவெக-வினர் மிரட்டி தாக்கி வருகிறது. அண்மையில் கூட தனியார் ஊடகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை தவெக-வினர் தாக்கினர்.
மேலும் தவெக-நிகழ்வுகளில் கூட பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அதே வேளையில் பத்திரிகையாளர்களை தவெக-வும் மதிப்பதில்லை. இதற்கு பல்வேறு வகைகளில் கண்டனங்கள் குவிந்து வந்தாலும், அதனை கண்டுகொள்ளாமலே தவெக தலைமை இருந்து வருகிறது.

இப்படியான சூழலில் தவெக அமைச்சர் பர்வேஸ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அவரது முன்னிலையிலேயே அவரது ஆதரவாளர் செய்தியாளரை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரை முற்றுகையிட்டு முறையிட்டனர். இதனை செய்தியாளர்கள் செய்தி சேகரித்தபோது அமைச்சருடன் வந்திருந்த தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களை மிரட்டினர்.
அதோடு அவர்களிடம் இருந்து கேமராக்களை பிடிங்கியதோடு, யாரும் செய்தி எடுக்கக் கூடாது என்றும் மிரட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல், அமைச்சர் முன்னிலையிலேயே அவர்கள் மிரட்டப்படும் சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






