
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், நேற்று (மே 23) மாலையில் நெட்டூர் கிராமத்தில் பிரதான சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் சிலர் மீதும் அங்கு இன்று நடைபெற்ற திருமண வீட்டிற்கு வந்த நபர்கள் சிலர் மீதும் முகத்தில் முகமுடி அணிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் ஆறு நபர்களுக்கு கை கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால் அவர்கள் உடனடியாக உறவினர்களால் மீட்கப்பட்டு அருகில் இருந்த நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் சிலர் மேல் சிகிச்சைக்காக ஆலங்குளம் தாலுகா அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் மீது அரிவாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி வெட்டு காயமடைந்த நபர்களின் உறவினர்கள் நெட்டூர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவ இடத்தில் ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு பட்டி பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய கும்பல் தப்பியோடியுள்ளது. முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய இருவரும் அரிவாள் வெட்டு சம்பவத்தில் காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலங்குளம் அடுத்த நெட்டூர் பகுதியில் நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்திற்கும், மானூர் சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சாதிய மோதல் ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
ஆலங்குளம் மற்றும் நெல்லை மானுர் அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றூ (மே 23) 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்துக்கு மேற்பட்டவரிடம் தனியாக விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜயின் கையில் உள்துறை இருந்தும், சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






