
கோயம்புத்தூரிலிருந்து கோவில்பாளையம் வழியாகக் குன்னத்தூர் நோக்கிப் புறப்பட்ட அந்தத் தனியார் பேருந்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். பேருந்து கோவில்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி, சாலையைக் கடக்க முயன்றபோது ஓட்டுநர் பிரேக் மிதித்துள்ளார்.
ஆனால், பிரேக் கம்பி துண்டிக்கப்பட்டு வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.பேருந்து கட்டுப்பாடின்றி ஓடியதால் உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிடத் தொடங்கினர்.
அந்த இக்கட்டான விநாடிகளில் சற்றும் பதற்றமடையாத ஓட்டுநர், சாலையின் ஓரத்தில் இருந்த மண் திட்டு மற்றும் மேடான பகுதிகளை நோக்கிப் பேருந்தைத் திருப்பி, அதன் வேகத்தைக் குறைக்கப் போராடினார்.பேருந்து கட்டுப்பாடின்றி வருவதைக் கண்ட அங்கிருந்த உள்ளூர் பொதுமக்களும் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு செயல்பட்டனர்.
சாலையின் இருபுறமும் இருந்த இதர வாகனங்களை அப்புறப்படுத்தியதோடு, பேருந்தின் வேகம் ஓரளவுக்குக் குறைந்த தருணத்தில், பெரிய கற்களைச் சக்கரங்களின் அடியில் முட்டுக் கொடுத்துப் பேருந்தை நிறுத்த உதவினர்.நொடிப்பொழுதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 40-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
ஆபத்தான சூழலிலும் அசாத்தியமான தற்காப்புத் திறனை வெளிப்படுத்தி, சாதுரியமாகப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரைப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.






