தமிழ்நாடு

“உங்கள் அரசியல் பயணம் புரிந்துவிட்டது” : ராகவா லாரன்ஸிற்கு இயக்குநர் சேரன் கண்டனம்!

நடிகர் ராகவா லாரன்ஸிற்கு இயக்குநர் சேரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உங்கள் அரசியல் பயணம் புரிந்துவிட்டது” : ராகவா லாரன்ஸிற்கு இயக்குநர் சேரன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ராகவா லாரன்ஸ், தான் அரசியலுக்கு வரப்போவதை உறுதிபட அறிவித்துள்ளார். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பேசியிருந்த அவர், "நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பதை எனது ரசிகர்களும் பொதுமக்களும் சொல்லுங்கள்" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், "நான் அரசியலுக்கு வரவேண்டும் எனச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். இதனால் நான் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறேன், அதை விரைவில் அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் த.வெ.க ஆட்சி குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த லாரன்ஸ், "ஒரு புது வீட்டிற்குச் செல்லும்போது அங்கிருக்கும் தெருநாய்கள் நம்மைப் பார்த்துக் குரைக்கும், அது நம்மிடம் பழகுவதற்கும், அதற்கு என்ன உணவு பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் நமக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது" என்று கூறினார்.

அரசியல் மாற்றத்திற்கும், புதிய அரசிற்கும் அதுபோலக் கால அவகாசம் தேவை என்ற அர்த்தத்தில் அவர் பேசிய இந்தத் 'தெருநாய்' ஒப்பீடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் சேரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.

மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்..

இப்படிக்கு.. பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்" என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories