
அ.தி.மு.க ஆட்சியில் ,2020ம் ஆண்டு, ஜூன் 19ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்கிஸ் ஆகியோரை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பால்துரை கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, மீதமுள்ள 9 பேரின் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்தது.
இதையடுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். அதில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை அவர் வழங்கினார். அதன்படி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு மரண தண்டனையுடன் தலா 84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு மரண தண்டனையுடன் 52 லட்சம் ரூபாய் அபராதமும், தலைமைக் காவலர் முருகனுக்கு மரண தண்டனையுடன் 50 லட்சம் ரூபாய் அபராதமும், காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு மரண தண்டனையுடன் 40 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் அபராதமும், காவலர் முத்துராஜாவுக்கு மரண தண்டனையுடன் 32 லட்சம் ரூபாய் அபராதமும், காவலர் சாமதுரைக்கு மரண தண்டனையுடன் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார்.






