
கழகத் தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (05-04-2026) மாலை, மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
அன்புக்கும் - பண்புக்கும் - விருந்தோம்பலுக்கும் - பெயர்பெற்ற ஊர்! பாசாங்கு இல்லாத பாசமிக்க மனிதர்கள் வாழும் ஊர், நம்முடைய மதுரை! தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர்! எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஊர், மதுரை! ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இரவு 12 மணிக்கு கூட ஆவி பறக்க சுடச்சுட இட்லி கிடைக்கும். அதனால்தான் தூங்கா நகரம் என்று சொல்கிறோம்! தமிழ் இலக்கியத்தில் சிறப்பான இடம் கொண்ட ஊர்! கண்ணகி நீதி கேட்டு முழங்கிய மதுரைக்கு தமிழ்நாட்டை வஞ்சிப்பவர்களை தண்டித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கு வெற்றியைக் கேட்டு வந்திருக்கிறேன்! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். தலைநிமிர்ந்த தமிழ்நாடு, புது உயரங்களை அடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, உங்களின் பொன்னான வாக்குகளை கேட்டு வந்திருக்கிறேன். இப்போது நம்முடைய வெல்லும் வேட்பாளர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
முதலில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள். மதுரையில் மூர்த்திக்கு அறிமுகம் தேவையா? என்னுடைய அன்பை மட்டுமல்ல, உங்கள் எல்லோருடைய அன்பையும் பெற்றவர்தான் மூர்த்தி! அமைச்சராகப் பணியாற்றி, மாபெரும் சாதனைகளைச் செய்தவர்! தன்னுடைய துறையில் முத்திரைப் பதித்தவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்கள். நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவரான, பி.டி.ராசன் அவர்களின் பேரன், பண்பாளர் கழகத்தின் மாண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் அவர்களின் அருமை மகன் நம்முடைய பி.டி.ஆர்! சிந்தனையிலும் சரி, விவாதங்களிலும் சரி, பி.டி.ஆரை வீழ்த்துவது முடியாத செயல்! அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் கோ. தளபதி அவர்கள். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வருபவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் சேடப்பட்டி மணிமாறன் அவர்கள். கழகத்தின் மூத்த முன்னோடியான சேடப்பட்டி முத்தையா அவர்களின் அருமை மகன். மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். திருமங்கலத்தில் இந்த முறை கழக வெற்றிக்கொடியை நிச்சயமாக ஏற்றப் போகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஆ. வெங்கடேசன் அவர்கள். கிளைக் கழகச் செயலாளராக இருந்து உயர்ந்த செயல்வீரர். ஆதி திராவிடர் நலப்பிரிவு அமைப்பாளராக இருந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக உழைத்தவர். கடந்த முறை வெற்றி பெற்று சிறப்பாக தொகுதிக்கு பணியாற்றியவர். தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்தவர். மீண்டும் உங்கள் ஆதரவைக் கோரி நிற்கிறார். அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பூமிநாதன் அவர்கள். என்னுடைய ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களின் அன்பைப் பெற்றவர். பொடா சட்டத்தில் கைதாகி, அண்ணன் வைகோ அவர்களுடன் 19 மாதங்கள் சிறையில் இருந்த தியாகத்திற்குச் சொந்தக்காரர். ‘உறங்கா புலி’ மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் வழக்கறிஞர் ரகு பாலாஜி அவர்கள். சட்டக் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் இருந்து கழகப் பணியாற்றி வரும் கொள்கைப் பற்றாளர். வழக்கறிஞர் அணி – இளைஞரணி என்று வளர்ந்து, இன்றைக்கு வடக்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் திருமதி கிருத்திகா தங்கபாண்டி அவர்கள். மாவட்டக் கவுன்சிலராக இருந்து, மகளிரை தொழில்முனைவோர் ஆக்கும் முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறார். மகளிருக்கு மருத்துவ முகாம்கள், கட்டணமில்லா ஓட்டுநர் பயிற்சி உள்ளிட்ட சமூக சேவைகளை அதிகமாக செய்யும் அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி. என்னுடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் நம்முடைய வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணக்குமார் அவர்கள். விடுதலைக்காக போராடிய குடும்பத்தில் பிறந்தவர். காந்திய உணர்வு கொண்ட இளைஞர். அவருக்கு கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மேலூர் சட்டமன்றத் தொகுதி. என்னுடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் இன்று மாலை அறிவிக்கப்பட்டிருக்கும் நம்முடைய வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் அவர்கள். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, மக்கள் பணியாற்றியவர். மதுரையில் குடியிருக்கும் அவருக்கு, மேலூர் தொகுதி மக்கள் கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
இங்கு மேடையில் நிற்கும் 10 பேரின் வெற்றியையும், நீங்கள் உறுதி செய்துவிடுவீர்களா? வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி. வெற்றி உறுதி ஆகிவிட்டது. வேட்பாளர்கள் உட்காரலாம்.
மாமதுரையின் வளர்ச்சி என்றாலே தி.மு.க.தான்! நம்முடைய ஆட்சிக்காலங்களில் செய்யப்பட்ட முத்தாய்ப்பான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால்,
1971-இல் மதுரை மாநகராட்சியாக ஆனது!
மாவட்ட நீதிமன்றம்!
மதுரை முத்து மேம்பாலம்!
ஆண்டாள்புரம் மேம்பாலத்திற்கு பசும்பொன் திருமகனார் பெயர்!
தியாகி என்.எம்.ஆர். சுப்புராமன் மேம்பாலம்!
மானம்காத்த மருதுபாண்டியருக்குச் சிலை!
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்போது திராவிட மாடல் அரசில் இரண்டு முக்கியமான அமைச்சர்கள் மதுரைக்கு கிடைத்த காரணத்தினால், கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளில் ஹைலைட்டான சிலவற்றை இப்போது சொல்கிறேன்.
தென்தமிழ்நாட்டின் அறிவு ஆலயமாக மாறி, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் படித்து முன்னேற துணையாக இருக்கும், கலைஞர் நூற்றாண்டு நூலகம்! பெருமையோடு சொல்கிறேன்… கடந்த ஆண்டு மட்டும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து, 24 பேர் TNPSC-இல் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த நூலகத்தின் பயன் என்னவென்று போட்டித் தேர்வில் தேர்ச்சி செய்த அவினாஷ் என்ற மாணவன் சொன்னதை நான் சொல்கிறேன், “இது மாதிரியான திறன் மேம்பாட்டு படிப்புகளை படிக்க வேண்டும் என்றால், ஒரு இலட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும்.
ஆனால், கலைஞர் நூலகத்தால் எந்தச் செலவும் இல்லாமல் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுவிட்டேன்” என்று அவினாஷ் சொல்லியிருந்தார். அதேபோன்று, பழங்காநத்தத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சகோதரர் ஸ்ரீகாந்த் அவர்கள், இங்கு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, படித்து, வங்கி உதவி மேலாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் என்ன பேட்டி கொடுத்தார் தெரியுமா, “என்னுடைய கனவுக்கு கை கொடுத்தது கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். இந்த மாதிரி நம்முடைய இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு திட்டங்களையும் சாதனைத் திட்டங்களாக நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்!
அடுத்து, நம்முடைய பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அலங்காநல்லூர் கீழக்கரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்!
அதுமட்டுமல்ல, மேலமடையில் மிக நீளமான வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்!
சமீபத்தில் என்னால் திறக்கப்பட்ட கோரிப்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம்! திருமங்கலம் - கள்ளிக்குடி இடையிலான வீரபாண்டிய கட்டபொம்மன் மேம்பாலம்! உலக தரத்தில் ஹாக்கி விளையாட்டரங்கம்! தினமும் 10 ஆயிரம் மக்கள் வந்து மகிழும் புனரமைக்கப்பட்ட வண்டியூர் பூங்கா! மதுரை மக்கள் இப்போது அந்தப் பார்க்கை பார்த்து என்ன சொல்கிறீர்கள்… ‘குட்டி மெரினா போன்று மதுரைக்கு கிடைத்திருக்கிறது’ என்று பேசுகிறீர்கள். வைகை வடகரை சாலை மேம்பாடு, சிட்கோ தொழிற்பூங்கா, காவிரி குடிநீர் திட்டம்!
இதுவரை இல்லாத அளவிற்கு மதுரை மாவட்டத்தில் மட்டும், 1 இலட்சத்து 22 ஆயிரத்து 680 பேருக்கு இ-பட்டாக்கள்!
செல்லூர் கண்மாயிலிருந்து வைகை ஆறு வரை சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணி என்று ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம்!
அதுமட்டுமா, செல்லூரில் பந்தல்குடி மேம்பாலம், கள்ளழகர் திருக்கோயிலில் 40 கோடி ரூபாயில் பக்தர்களுக்கான வசதிகள், திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் வசதி ஆகிய பணிகள் தொடங்கப் போகிறது. பிப்ரவரி கடைசியில் நான் மதுரைக்கு வந்தது உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தேன். கரிமேட்டில் அறிவியல் மையம். மதுரை எல்காட்டில் பினக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய சிறப்பு பொறியியல் மையம் விரிவாக்கம். நம்முடைய மதுரை இளைஞர்களுக்கு பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் என அந்தப் பயணம் அமைந்தது.
அப்போது, ஆங்கில பத்திரிகைகள் எல்லாம் என்ன எழுதினார்கள் தெரியுமா? “மதுரையைத் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அதற்கான திட்டங்களை நிறைய கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறார்” என எழுதினார்கள். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-இல் இந்தச் செய்தி வந்திருக்கிறது.
இப்படி மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல்தான் திராவிட மாடல்! மகளிரை முன்னேற்றும் மாடல்! இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் மாடல்! முதியோர்களுக்கு அன்புக்கரம் நீட்டும் மாடல்! எல்லாவற்றிற்கும் மேல், அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான, மகத்தான மாடல்!
ஆனால், N.D.A. முன்வைப்பது வளர்ச்சியைக் கெடுக்கும் ஆரிய மாடல்! மதநல்லிணக்கத்தை கெடுக்கும் ஆரிய மாடல்! மக்களைப் பிளவுபடுத்தும் ஆரிய மாடல்! இன்னும் சொன்னால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் வன்முறை மாடல்!

அண்ணன் தம்பியாக - அக்கா - தங்கையாக உறவுமுறையோடு பாசமாக பழகும் மதுரை மக்கள் மிகவும் புத்திசாலிகள்! அதனால்தான், கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை சிறப்பாக முறியடித்தீர்கள். அதற்காக உங்கள் பாதங்களையெல்லாம் தொட்டு நான் நன்றி கூறுகிறேன்.
மதுரைக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? கறிதோசை, பரோட்டா என்று நன்றாக சாப்பிட்டோமா, வெயிலுக்கு இதமாக ஒரு ஜிகர்தண்டாவை குடித்தோமா, தெப்பகுளம் பக்கமாக காலார நடந்தோமா, கோயில் திருவிழாக்களை கொண்டாடினோமா என அமைதியை விரும்புகின்றவர்கள் நீங்கள். இதுதான் தமிழ்நாட்டின் D.N.A.!
ஆனால், இதைச் சிதைக்க வேண்டும் என்று NDA துடிக்கிறார்கள். அவர்களின் அடிமைகளாக அ.தி.மு.க.வை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியிருக்கிறார் பழனிசாமி! அமைதியையும், வளர்ச்சியையும், சகோதர பாசத்தையும் முன்னிறுத்தும் தமிழ்நாட்டின் D.N.A.-வுக்கு மாறாக, சொந்த மண்ணுக்கும் - சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கட்சியாக NDA இருக்கிறது. இவர்கள்தான், டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று தமிழ்நாட்டுக்குள் வர நினைக்கிறார்கள். இவர்களின் இலட்சணம் என்ன? மதுரைக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று எய்ம்ஸ் மருத்துவமனையை, 2015 பட்ஜெட்டில் அறிவித்தார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அடிக்கல் நாட்டினார்கள். அதற்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தது; 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது; இப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது! ஆனால், எய்ம்ஸ் மட்டும் வரவே இல்லை! மதுரை எய்ம்ஸ் பேப்பரில் இருக்கிறதே தவிர; நிஜத்தில் இல்லை! இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில், 2017-இல் அடிக்கல் நாட்டி, 2022-இல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க முடிந்த அவர்களால், மதுரை எய்ம்ஸை ஏன் உருவாக்க முடியவில்லை?
இதுவே நம்முடைய திராவிட மாடலில் அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடத்தில் இதே மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகிவிட்டது. ஒன்றரை வருடத்தில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை உருவாகிவிட்டது! ஒன்றரை வருடத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா உருவாகிவிட்டது! கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைத்து திறந்து வைத்துவிட்டோம். கோவையில் பெரியார் அறிவுலக நூலகம். திருச்சியில் காமராசர் நூலகம். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் நிகழ்ச்சியாக அதைத்தான் நான் திறக்கப் போகிறேன்.
ஏன் பா.ஜ.க.வால் நம்மை மாதிரி வேகமாக செயல்பட முடியவில்லை? ஏன் என்றால், அவர்களுக்கு தமிழ்நாடு மேல் இருக்கும் வெறுப்பு அப்படிப்பட்டது. அதனால்தான் கீழடி நம் தாய்மடி என நாம் கொண்டாடும் கீழடி ஆய்வறிக்கையை, இப்போது வரை வெளியிட மறுக்கிறார்கள். இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கியது என அறிவியல்பூர்வமாக நாம் நிரூபித்திருக்கிறோம். அந்த ஆய்வு முடிவை வெளியிட்டதற்கு பிரதமர் மோடி அவர்களோ, பா.ஜ.க. அரசோ ஒரு வாழ்த்து கூட இது வரை சொல்லவில்லை.
அண்மையில்கூட நம்முடைய மதுரைக்காக மெட்ரோ ரயில் திட்டத்தை கேட்டோம். ஆனால், ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களுக்கு கொடுத்தார்களே தவிர, மதுரைக்கும் - கோவைக்கும் மறுத்துவிட்டார்கள்! இப்படிப்பட்ட துரோக கூட்டணிதான் N.D.A! தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் செயல்படும் N.D.A.வின் சதித்திட்டங்களை வென்று, வளர்ச்சிப் பாதையில் நம்முடைய சாதனை பயணத்தை தொடர வேண்டும்!
பத்தாண்டுகாலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீரழித்தது அ.தி.மு.க.! அதற்கு துணை போனது பா.ஜ.க.! நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்! 2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்!
ஆட்சிக்கு வந்து முதல் நாள் முதல் கையெழுத்திலேயே மகளிர் எல்லோரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டேன். அதைத் தொடர்ந்து, திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை நான் இப்போது தலைப்புச் செய்திகளாக சொல்லப் போகிறேன்…
ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. இனி, உங்களின் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது!
அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் செல்லும் மாணவ - மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்! இனி இந்தத் தொகை, ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது!
இதே மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு, ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 19 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு சூடாக - சுவையாக சத்தான உணவை வழங்கும் “காலை உணவுத் திட்டம்”! இந்தத் திட்டத்தை இப்போது எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப் போகிறோம்!
பல இலட்சம் உயிர்களைக் காக்கும் “மக்களைத் தேடி மருத்துவம்!”
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பல்லாயிரம் பேரின் உயிர்களையும், குடும்பங்களையும் காப்பாற்றிய
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48.
பாதம் பாதுகாப்போம்!
இதயம் காப்போம்!
சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம்!
ஒன்றிய அரசே பின்பற்றப் போவதாக சொல்லியிருக்கும், தோழி விடுதி!
ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு!
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்!
கலைஞர் கனவு இல்லம்!
இப்படி நாள் முழுவதும் என்னால் பட்டியலிட முடியும்!
நான் இவ்வளவு நேரம் நாம் நிறைவேற்றி வரும் எத்தனையோ திட்டங்களை சொன்னேன். நிறைய சொல்லாமலும் விட்டிருக்கிறேன். புதிய வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்தியாவிலேயே அதிக திட்டங்களை தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசுதான் செயல்படுத்துகிறது!
இது தெரிந்தும், மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், எதுவும் தெரியாத மாதிரி நேற்று பேசியிருக்கிறார். பியூஷ் கோயல் அவர்கள் என்ன பேசினார்? “தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசின் பணம் எல்லாம் எங்கே போகிறது? கடன்சுமை அதிகரித்துவிட்டது, தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது” என்று எந்தப் புரிதலும் இல்லாமல் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை, எங்கள் திட்டங்களுக்கெல்லாம் பெயரை மட்டும் மாற்றி அறிக்கை வெளியிட்டிருக்கும் பழனிசாமியிடம் கேளுங்கள். அவர் சொல்வார்.
தமிழ்நாடு அரசின் பணமெல்லாம் எங்கே போகிறது என்று கேட்கிறீர்களே… எல்லாமே நேரடியாக மக்களுக்குதான் போகிறது. ஒரு மாதம் முன்னால் கூட எல்லோருக்கும் 5 ஆயிரம் போனதே! உங்களுக்கு தெரியாதா? அது இங்கு இருக்கும் பயனாளிகள் எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் கேட்பது, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்கு கட்டும் வரிப்பணம் எல்லாம் எங்கே போகிறது? தமிழ்நாட்டிற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
ஒன்றிய அமைச்சர் கோயல் அவர்களே, அப்படியே, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதியை கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள். அப்போதுதானே, தமிழ்நாட்டை நீங்கள் எந்தளவுக்கு வஞ்சிக்கிறீர்கள் என்று தெளிவாக புரியும்!
தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசியிருக்கிறீர்களே… நேற்று உங்கள் அமைச்சரவை நண்பர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு ஒரு சவால் விட்டேன். இன்று உங்களுக்கு ஒரு சேலஞ்ச் செய்கிறேன்.
தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுக்கும், ஒரு ரூபாய்க்கு பதிலாக திரும்ப எங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? அதுவே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? இந்த கம்ப்பேரிசனை வெளிப்படையாக அறிவிக்க உங்களால் முடியுமா? சொன்னால் உங்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்.
நான் உண்மையை உடைத்து சொல்லவா? பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களுக்கு தரும் அதே அளவு நிதிப் பகிர்வை தமிழ்நாட்டிற்கும் நீங்கள் வழங்கினால், தமிழ்நாட்டுக் கடனே அடைந்து, நமக்கு நிதி நெருக்கடியே இருக்காது. எங்கள் பணத்தையே வாங்கிக்கொண்டு, எங்களிடமே பணம் எங்கே போகிறது? என்று கேட்கிறீர்களே… இது நியாயமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்லுவார்களே… அது இதுதானா!
பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மீதான கோபம் மட்டுமல்ல, அவர்களுக்கு தமிழ்நாடு மேலேயே வெறுப்புதான். இத்தனை நிதி நெருக்கடியை கொடுத்தும், பொருளாதார வளர்ச்சியில், ஜி.டி.பி. வளர்ச்சியில், தனிநபர் வருமானத்தில், ஆடை, காலணிகள், மின்னணு பொருள் ஏற்றுமதியில், இப்படி எல்லாவற்றிலும் நாம் நம்பர் ஒன் ஆக இருந்தால் வெறுப்பு வரத்தானே செய்யும்! அதற்காக, இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலத்தை பார்த்து, திவால் ஆகிவிடுவோம் என்ற ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வது ரொம்ப ‘டூ மச்’!
பார்த்துக் கொண்டே இருங்கள். N.D.A.-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது! நிதி நிர்வாகம் பற்றி தமிழ்நாட்டுக்கு இவ்வளவு அக்கறையாக பாடம் எடுக்கிறீர்களே… பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன? ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவோம் என்று வாய்கிழிய பேசினீர்களா இல்லையா? இன்று, என்ன நிலைமை? வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு பா.ஜ.க. ஆட்சியில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாளில் செஞ்சுரி போடப் போகிறது! சென்று முதலில் அதை எப்படி தடுப்பது என்று பாருங்கள். பரீட்சையில் தோல்வி பெற்ற மாணவன் வந்து எல்லா பாடப் பிரிவிலும் டாப்பராக இருக்கும் எங்களுக்கு அட்வைஸ் பண்ணலாமா? முதலில் நீங்கள் ‘பாஸ்-மார்க்’ ஆச்சும் பெற்றுவிட்டு வந்து அதன் பிறகு தமிழ்நாட்டு கதையை பேசுங்கள்.

2021-இல் திராவிட மாடல் ஆட்சிக்காக, மக்களின் ஆதரவைக் கேட்டு வரும்போதே, அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாக கொடுத்துவிட்டுதான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது, 2.0 ஆட்சியில், எதிர்கால தமிழ்நாட்டை கட்டமைக்கப் போகும் செயல்திட்டம் அடங்கிய தேர்தல் அறிக்கையை ‘சூப்பர்ஸ்டாராக’ களமிறக்கியிருக்கிறோம்! இந்த தேர்தலின் சூப்பர்ஸ்டார் யார்? நம்முடைய தேர்தல் அறிக்கை! இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பான்!
நம்முடைய இல்லத்தரசி திட்டம்தான், டாக் ஆஃப் த டவுன்! இப்போதே வீட்டுக்கு என்ன புது பொருள் வாங்கலாம் என்று பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்! இந்தத் திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப்போகிறோம்! எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் பண்ணி புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக் கொள்ளலாம்!
அடுத்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சார பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!
உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும். தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கப் போகிறோம். கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இது நிறைவேறும்போது தென்மாவட்டங்களில் மருத்துவ வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரிய புரட்சி நடந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
இதுபோக, மதுரைக்காகவே பல சிறப்பு வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறோம். பார்த்தீர்களா? மதுரைக்காக என்னவெல்லாம் இருக்கிறது என்று சொல்லவா? மதுரையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். அதிக செலவு ஏற்படும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள சிறப்பு ஆய்வகம் மதுரையில் தொடங்கப்படும்.
நான் முதல்வன் 2.0 திட்டத்தில் மதுரை பகுதியைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு மருத்துவம் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்படும். உலகத்தரம் மிக்க Global Talent Gateway மதுரையில் அமைக்கப்படும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உயர்தர திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 500 GCC மையங்கள் அமைக்க வழிவகை செய்யப் போகிறோம். அதில், மதுரையிலும் பரவாலன திறன் மையங்கள் அமைக்கப்பட தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவோம்.
மதுரையில் உணவு பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்.
நவீன பண்பாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
மதுரைக்கு அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்!
நாங்கள் சொன்னால், சொன்னதைச் செய்வோம்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்! தமிழ்நாட்டை தலைநிமிர வைப்பதுதான் நம்முடைய கொள்கை!
இந்தியை திணிப்பதற்காக நம்முடைய குழந்தைகளின் கல்வி நிதியைக்கூட நிறுத்தி வைத்திருக்கும் பா.ஜ.க.வும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வும் வைத்திருக்கும் இந்தத் துரோகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் தண்டனை தரப் போகும் நாள்தான், ஏப்ரல் 23.
எனவே, மதுரை கிழக்கு தொகுதியில் – பி. மூர்த்தி அவர்களுக்கும், மதுரை மத்தி தொகுதியில் – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்களுக்கும், மதுரை வடக்கு தொகுதியில் – கோ. தளபதி அவர்களுக்கும், திருமங்கலம் தொகுதியில் – சேடப்பட்டி மணிமாறன் அவர்களுக்கும், சோழவந்தான் தொகுதியில் – ஆ. வெங்கடேசன் அவர்களுக்கும், மதுரை தெற்கு தொகுதியில் – பூமிநாதன் அவர்களுக்கும், மதுரை மேற்கு தொகுதியில் – ரகு பாலாஜி அவர்களுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியில் – கிருத்திகா தங்கபாண்டி அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அதேபோல், உசிலம்பட்டி தொகுதியில் – காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார் அவர்களுக்கும், மேலூர் தொகுதியில் – விஸ்வநாதன் அவர்களுக்கும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் மதுரை மக்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு அணியா… டெல்லி அணியா… என்ற இந்த ஜனநாயக போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாடு அணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சியே தொடர்ந்திட, தமிழ்நாடு வளர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!






