தமிழ்நாடு

“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!

பா.ஜ.க.வில் இருக்கக்கூடியவர்கள் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், தி.மு.க-காரர்கள் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது.

“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.1.2026) சென்னை, பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை:-

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடும் இந்த சிறப்பான நேரத்தில் உங்களை எல்லாம் நான் சந்தித்து, இந்த கொளத்தூர் தொகுதியில் – மன்னிக்கவும் – நம்முடைய கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய கழகத்தின் செயல்வீரர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு முன்கூட்டியே கிடைத்திருக்கிறது.

இந்த சிறப்பான நிகழ்ச்சியை அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக நம்முடைய சேகர்பாபு அவர்கள் இருந்தாலும், நம்முடைய தொகுதி என்று சொன்னால் அதில் ஒரு எழுச்சி இருக்கும், ஒரு சிறப்பு இருக்கும், ஒரு மகிழ்ச்சி இருக்கும், ஒரு ஆர்வம் இருக்கும், ஆரவாரம் இருக்கும். நம்மையே அறியாமல் நம்முடைய உள்ளத்தில் ஒரு புளங்காகிதம் இருக்கும். அந்த உணர்வோடு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய சேகர்பாபு அவர்களுக்கும் அவருக்கு துணை நின்ற கழக நிருவாகிகளுக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நான் பல நேரங்களில் கொளத்தூர் நிகழ்ச்சிக்கு வருகின்றபோது சொல்வதுண்டு, என்னதான் முதலமைச்சராக இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, கழக நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில் என்ன மகிழ்ச்சி அடைகின்றேனோ, என்ன பெருமை அடைகின்றேனோ – ஆனால், அதைவிட கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்கு வந்துவிடுகிறது. அந்த எனர்ஜியுடன் தான் நான் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன்.

பொங்கல் விழாவை இன்றைக்கு நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது, என்னென்ன சாதனைகளையெல்லாம் புரிந்திருக்கிறது என்பது உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பொங்கல் விழாவை இப்படி எழுச்சியோடு கூட்டி உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளில் 50 சதவிகிதம் முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவிகிதம் தான் மீதம் இருக்கிறது.

இன்றைக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். ஏன், பா.ஜ.க.வில் இருக்கக்கூடியவர்கள் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், தி.மு.க-காரர்கள் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 1967-இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது அன்றைக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவச்சலம் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். “திமுக-காரன் ஒரு சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது” என்று வெளிப்படையாகவே சென்னவர் அவர். அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன்.

நீங்கள் ஆற்றக்கூடிய பணிகள், ஏதோ கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் நம்முடைய செயல் வீரர்கள் ஆற்றும் அந்தப் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது - 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று, நம்முடைய கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன், ஆனால், நாம் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். பொங்கல் விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவிருக்கும் தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறுவதற்கு உறுதியெடுப்போம் சபதம் எடுப்போம், என்று கூறி மீண்டும் வாழ்த்து சொல்லி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories