
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கித் தருவதாகவும்,போலி ஆவணங்களை தயார் செய்து ரூ. 2.50 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் பச்சமுத்து மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பச்சமுத்து மற்றும் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் என்பதும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆத்தூர் அருகே இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நில மோசடி வழக்கில் அ.தி.மு.க பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








