தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், சட்டத்துறை சார்பில் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் 48 கோடியே 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டடங்கள் மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் 6 கோடியே 46 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நீதித்துறையின் மேம்பாட்டிற்காக இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து, நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, புதிதாக பல்வேறு இடங்களில் நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுதல், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு புதிய கூடுதல் கட்டடங்கள் கட்டுதல்;
நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குதல், தமிழ்நாடு வழக்கறிஞர் நலநிதியத்திலிருந்து உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவியை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தியது, உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டடம்
மதுரை மாவட்டம், தல்லாகுளம், தங்கராஜ் சாலையில் 1,35,088 சதுர அடி பரப்பளவில் 48 கோடியே 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மதுரை அரசு சட்ட கல்லூரிக்கான புதிய கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டடம் 25 வகுப்பறைகள், கருத்தரங்கு மண்டபம், காணொளி காட்சி அறை, சொற்பொழிவு அறை, உள்விளையாட்டு அரங்கம், மாணவ, மாணவியருக்கு தனித்தனி ஓய்வு அறைகள், மாதிரி நீதிமன்ற அரங்கம் மற்றும் நவீன தரத்தில் கல்லூரி அலுவலகம் ஆகிய பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய நூலகக் கட்டடம்
2022-2023-ஆம் ஆண்டிற்கான சட்டத்துறை மானியக் கோரிக்கையில், வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கு புதிய நூலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்தி நகரில் 20,000 சதுர பரப்பளவில் 6 கோடியே 46 இலட்சத்து
85 ஆயிரம் ரூபாய் செலவில் வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கு
தரை மற்றும் இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இக்கட்டடம் மாணவர்களுக்கான குறிப்புதவி பிரிவு, புத்தகங்கள் வழங்கும் பிரிவு, அதிவேக இணையதள வசதியுடன் கூடிய மின் மண்டலம், கருத்தரங்கு கூடம் மற்றும் நூலகர் அறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.