
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி இல்லை;
சமூகநீதி அடிப்படையில் சமவுணர்வுடன் அனைத்து தரப்பு மக்களும் அடையக்கூடிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி எனும் நோக்குடன் தி.மு.க ஆட்சியில் செயல்படுத்திய முத்தாய்ப்புத் திட்டங்களின் பெயர்களை மாற்றி, ஏமாற்றத்திற்கான அரசியலை மேற்கொண்டு வருகிறது த.வெ.க அரசு.
அவ்வகையில், இந்திய ஆட்சிப்பணிகளிலும், உயர்ந்த பதவிகளிலும் எளிய மாணவர்கள், தங்களை பணியமர்த்திக்கொள்ளும் வகையில், செயல்படுத்தப்பட்ட திறன் பயிற்சித்திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டம்;
சரியான இருப்பிட வசதியற்றவர்களுக்கு இடமும், கணினி பயன்பாடும் ஒரு குறையாக இருந்திடக் கூடாது என அமைக்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்’ திட்டம்;

மகளிரின் விடியலுக்காக பேருந்து பயணங்களை இலவசமாக்கும் வகையில், தி.மு.க செயல்படுத்திய கலைஞர் மகளிர் விடியல் பயணம் திட்டம்;
என இவ்வனைத்து திட்டங்களின் பெயர்களையும் மாற்றி, காழ்ப்புணர்ச்சி கொண்ட ஆட்சியை நிறுவி வருகிறது த.வெ.க.
அந்த காழ்ப்புணர்ச்சியின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, நியாய விலைக்கடைப் பொருட்கள் வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்ற முடிவெடுத்துள்ளது த.வெ.க அரசு.
புதிய செயல்திட்டங்களை செயல்படுத்தவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் நெஞ்சுரம் இல்லாமல், இருக்கின்ற மக்கள் நலன் திட்டங்களின் பெயர்களை மாற்றி, ஏதோ சாதிப்பதாக விளம்பரம் செய்து வருகிறது த.வெ.க அரசு.
இந்த மோசமான ஏமாற்ற அரசியலைக் கண்டு, தமிழ்நாடு தோறும் மக்கள் முகம் சுளித்து வருகின்றனர்.






