சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் நிறைவடைந்தன.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளை நிறைவு செய்துள்ளது.
இந்தச் சோதனைகள் மெட்ரோ இரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை (RDSO - Research Designs and Standards Organisation) சேர்ந்த அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 16, 2025 அன்று தொடங்கிய இந்த சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், வழித்தடத்தில் இரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் (verification of traction and braking performance) பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்பட்டது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது:
பயணத் தரம் (Ride quality): மெட்ரோ இரயிலில் பயணிப்பது பயணிகளுக்கு எவ்வளவு வசதியானது என்பதை அறிய, மெட்ரோ இரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பு (Passenger Safety): மின்சாரம், காற்றழுத்தம் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், பிரேக் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த இரயில் கட்டுமானமும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறதா என்பதை அறிக்கை சரிபார்க்கிறது.
மெட்ரோ இரயில் பெட்டிகளைத் தயாரிக்கும்போது, அதன் வடிவமைப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை இந்த வெற்றிகரமான சோதனைகள் நிரூபிக்கின்றன. மேலும், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சோதனைகள் நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தர நிலைகளை பின்பற்றியுள்ளது என்பதை நிரூபிக்கிறது.