முரசொலி தலையங்கம்

”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!

முதல்வர் விஜயின் முதல் டெல்லிப் பயணம் மிகப்பெரிய தோல்வியை சந்திதுள்ளதைக் குறிப்பிட்டு, காரணங்களைப் பட்டியலிட்டு விமர்சித்துள்ளது முரசொலி தலையங்கம்.

”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தோல்வியில் முடிந்த டெல்லிப் பயணம்!

விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், 'விஜய் நாளை டெல்லி பயணம்' என்ற செய்தியை தினந்தோறும் தமிழ்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அவருக்காக டெல்லி காத்திருப்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்க இவர்கள் திட்டமிட்டார்கள். விஜய்யைவிட அதிகமாகவே இவர்கள் கூவினார்கள்.

இருபது நாட்கள் கழித்துத்தான் அவருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. பிரதமரைச் சந்திக்கிறார், உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறார். நிதி அமைச்சரைச் சந்திக்கிறார், சோனியாவைச் சந்திக்கிறார், ராகுலைச் சந்திக்கிறார் என்று இரண்டு நாட்களுக்காக பயணத்திட்டத்தை ஊடகங்கள் வெளியிட்டன. ‘இது மரியாதை நிமித்தமான பயணம் மட்டுமல்ல; மரியாதையை உயர்த்தப் போகும் பயணம்' என்றெல்லாம் ஊடகங்கள் அதிகமாக அலப்பறைகள் செய்தன. இவை எதுவும் நடக்கவில்லை.

பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் முதலமைச்சர் விஜய். அதுவும் பத்து நிமிடத்துக்குள் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. இருதரப்புக்குமான நலம் விசாரிப்புடன் இந்தச் சந்திப்பு முடிந்து விட்டது. இது முதல் தோல்வி.

உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில்தான் இருந்தார். விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால் அது ரத்து செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் கேரள முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார். கோவா முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார். நாகலாந்து ஆளுநரை அமித்ஷா சந்தித்துள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சரை சந்திக்க மறுத்துள்ளார். அமித்ஷா விஜய் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 'வேறு அலுவல்களில் உள்துறை அமைச்சர் இருக்கிறார்’ என்றும், ‘குஜராத் செல்கிறார்' என்றும் சொல்லப்பட்டது. திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்துள்ளார். இது இரண்டாவது தோல்வி ஆகும்.

செய்தியாளர்கள் சந்திப்பைத் திட்டமிட்டுப் புறக்கணித்திருக்கிறார் விஜய். அவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வரும் போதும், பிரதமரைச் சந்திக்கச் செல்லும் போதும், பிரதமரைச் சந்தித்துவிட்டு வரும்போதும், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போதும் ஊடகவியலாளர்கள் விஜய்யைப் பார்த்து குரல் எழுப்புகிறார்கள். 'பிரஸ் மீட் பண்ணுங்க சார்', 'எல்லா முதலமைச்சர்களும் பிரஸ் மீட் பண்ணுவாங்க சார்' என்று குரல் எழுப்புகிறார்கள். அதைக் காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!

விஜய் பதில் அளிக்காததால் டெல்லி செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்காத முதலமைச்சராக விஜய் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். டெல்லிப் பயணத்தின்போது செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திப்பது மரபு. அந்த மரபை அவர் மீறி இருக்கிறார். அலட்சியப்படுத்தி இருக்கிறார். டெல்லி ஊடகங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்.

இருபது நாட்களில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றியும், தான் ஆட்சி அமைக்க நடத்திய இழிவான குதிரை பேரங்கள் குறித்தும் ஊடகங்களுக்குப் பதில் சொல்ல தன்னால் முடியாது என்பதால் ஊடகங்களை விஜய் சந்திக்கவில்லை.

கரூர் சம்பவத்தின்போது பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்த விஜய் இன்று முதல்வராக இருக்கும் நிலையிலும் பத்திரிகையாளர்களைக் கண்டு அஞ்சுவது ஏன்?கட்சி மேடைகளில் மட்டும் வீர வசனம் பேசும் விஜய் பிரதமர் சந்தித்தது குறித்து கருத்து சொல்லத் தயங்குவது ஏன்?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து மனு கொடுத்துள்ளார் விஜய். நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், இல்லாத திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. ஒன்றிய அரசு நிராகரித்துள்ள மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார் விஜய். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்தித் தாருங்கள் என்றுதான் அவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களான சோனியாவையும் ராகுலையும் விஜய் சந்திப்பார் என்பது மிகப்பெரிய செய்தியாகப் பேசப்பட்டது. ஆனால் அவர் அவர்கள் இருவரையும் சந்திக்கவில்லை. 'சென்னைக்கு அவசரமாகத் திரும்ப வேண்டி இருந்ததால் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை' என்று அரசு வட்டாரங்கள் சொன்னது. 'சோனியாவும், ராகுலும் வேறு பணிகளில் இருக்கிறார்கள்' என்று காங்கிரஸ் தரப்பு சொல்கிறது. திட்டமிட்ட பயணத்தை நடத்த முடியாத அளவுக்கு இவை முக்கியமான காரணங்கள் அல்ல.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் விழாவுக்கும் வருவதாகச் சொல்லிவிட்டு ராகுலுக்கு அல்வா கொடுத்தார் விஜய். இப்போது சோனியா வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு, வராமல் திரும்பி இருக்கிறார் விஜய். இதன்பிறகுமா காங்கிரஸுக்கு உள் விவகாரங்கள் புரியவில்லை?

'காங்கிரஸின் 5 உறுப்பினர் ஆதரவைப் பெற்றாச்சு, அதுக்கு ரெண்டு மந்திரி தந்தாச்சு' என்பதோடு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் விஜய். ‘நம்பிக்கைத் துரோக' காங்கிரஸுக்கு அதற்குப் புரியும் வகையில் பதில் சொல்லி விட்டார் விஜய் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. விஜய்க்காகக் காத்திருந்து ராகுல் ஏமாந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஜய் திட்டமிட்டே காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பைத் தவிர்த்துள்ளார். இதன்மூலம் அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories