
நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதால், நீட் தேர்வுக்கு தடை கோரி வருகிறது தமிழ்நாடு. அனிதா தொடங்கி நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயுள்ளது. எனினும் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அவ்வாறு நடத்தப்படும் நீட் தேர்வும் சரியான முறையில் நடக்காமல், பல்வேறு முறைகேடுகள் குளறுபடிகளிலேயே நடந்து வருகிறது. இது தொடர்பான புகார்கள் குவிந்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு அதனை கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறது. இதனால் பல லட்சம் மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் சூழலில், தற்போது மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்தில் இறங்கினர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக நாட்டின் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் போராட்ட களத்தில் இறங்கியது. எதிரொலியாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். எனினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து என்பதே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் இன்று நீட் மற்றும் EWS இடஒதுக்கீட்டிற்கு எதிரான இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்கவிருந்தது. இந்த சூழலில் இந்த பரப்புரை பயணத்துக்கு தவெக அரசின் காவல்துறை திடீரென தடை விதித்ததுடன், பெரியார் திடலில் முன்னெச்சரிக்கையாகப் படைகளைக் குவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

த.வெ.க அரசின் இந்நடவடிக்கைக்கு தற்போது கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு :
NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.
அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!






