அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் குறித்து சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,”நம்ம திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திட்டு இருக்கோம்! அந்த வரிசையில, என்னோட மனசுக்கு பிடிச்ச திட்டமா உருவாகியிருக்குறதுதான்,இந்த தாயுமானவர் திட்டம்!
கூட்டுறவுத் துறை சார்புல வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்குற தாயுமானவர் திட்டத்த தொடங்கி வைக்குறதுல மகிழ்ச்சி அடையிறேன்! இப்படி, அரசோட சேவைகளை மக்களோட வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுக்குறது, இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி! ஒரு திட்டத்தை அறிவிக்குறதோட கடமை முடிஞ்சிடுறதா நாம நினைக்குறதில்ல!
அந்த திட்டத்தோட பலன் - பயன், கடைக்கோடி மனிதரையும் சென்று சேருதானு கண்காணிக்குறதையும் கடமையா நினைக்குறேன்! அப்படி, வயது முதிர்ந்தோரும் - மாற்றுத் திறனாளிகளும் ரேசன் கடைகளுக்குப் போய் பொருட்களை வாங்குறதுல ஏற்படுற சிரமத்த உணர்ந்து, இந்த திட்டத்த உருவாக்கியிருக்கோம்!
இந்தத் திட்டத்த 34 ஆயிரத்தி 809 நியாய விலைக் கடைகள்ல செயல்படுத்த போறோம்! 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்தி 42 ஆயிரத்தி 657 மூத்த குடிமக்கள் - ஒரு லட்சத்தி 27 ஆயிரத்தி 797 மாற்றுத் திறனாளிகள்னு 21 லட்சத்தி 70 ஆயிரத்தி 454 பேர் இந்த திட்டத்தால பயனடைய போறாங்க!
ஒவ்வொரு மாசமும் ரெண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்ல குடிமை பொருட்கள் உங்க வீடு தேடி வந்துடும்! இதுக்காக கூட்டுறவுத் துறைக்கு ஆகப்போற 30 கோடியே 16 லட்ச ரூபாயை கூடுதல் செலவாகருதாம - மக்களுக்கு செய்யிற உயிர்காக்கும் கடமையா நாங்க நினைக்குறோம்!
இது கூட்டுறவுத் துறையோட மிகப்பெரிய சேவை! அந்தத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போற மிகப்பெரிய கடமை! தமிழ்நாடு முழுக்க 37 ஆயிரத்தி 328 நியாய விலைக் கடைகள் இருக்கு!
இதுல, கடந்த நான்கு ஆண்டுகள்ல மட்டும் - 2 ஆயிரத்தி 394 புதிய நியாய விலைக் கடைகளை திறந்திருக்கோம்!தலைவர் கலைஞர் வழியில, இந்த நியாய விலைக் கடைகளை நாம முறையா - சிறப்பா நடத்துறதாலதான், தமிழ்நாடு இன்னைக்கு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமா இருக்கு!
இந்த ரேசன் கடைகளோட பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கோம்! இந்த நேரத்துல, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலவலர்களுக்கு நான் வைக்குற வேண்டுகோள் என்பது - இந்த திட்டத்தோடநோக்கம் நூறு விழுக்காடு நிறைவேறுற வகையில உங்களோட பணி அமையணும்!
உங்கள எதிர்பார்த்து காத்திருக்குற முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் மனம் குளிருற வகையில நீங்க கனிவா நடந்துக்கணும்! நீங்க வாங்குற நல்ல பெயர்தான், ஆட்சிக்கு கிடைக்குற பாராட்டு" என தெரிவித்துள்ளார்.