தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா - விடை நேரம் நடைபெற்று வருகிறது.
அதன் பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, விடையளிக்கும் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு மாவட்டங்களில் 72 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
இவை தவிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களும் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
கூடுதலாக, சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு, ரூ.2.59 கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்படும்.
மேலும், பல சட்டமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதிகளில் காவல் நிலையங்கள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பியும், கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர்.
இதற்கான விடையாக, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கையில் அறிவிப்புகள் இடம்பெறும்” என தெரிவித்தார்.