தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா - விடை நேரம் நடைபெற்று வருகிறது.
அதன் பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, விடையளிக்கும் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி, இதுவரை 1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன.
இவை மட்டுமின்றி, மலைப்பகுதிகளில் இருக்கும் பழங்குடி கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரும் பணிகளை, தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியுள்ளது.
அவ்வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் அமைந்துள்ள கடம்பன்கோம்பை பழங்குடி கிராமத்திற்கு மின்வசதி செய்து தர ரூ.1.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.