தமிழ்நாடு

கரூர் கொடுந்துயரம் : சாட்சிகளை அச்சுறுத்தும் விஜய் - உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவிடம் தி.மு.க. மனு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியது சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று தி.மு.க குற்றம்சாட்டியுள்ளது.

கரூர் கொடுந்துயரம் : சாட்சிகளை அச்சுறுத்தும் விஜய் - உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவிடம் தி.மு.க. மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூரில் த.வெ.க தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியானார்கள். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் கரூருக்கு சனிக்கிழமை சென்ற முதலமைச்சர் விஜய், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி முந்தைய தி.மு.க. அரசு மற்றும் காவல் துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவருடைய இந்தப் பேச்சு வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே அவர் மீது சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ் தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:--

கரூரில் கடந்த 18-ந்தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு கரூர் போலீஸ்துறை முழுப் பொறுப்பு போலவும்,இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பது போன்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள எதிர் ஆவணத்தில், த.வெ.க. அமைப்பாளர்களின் திட்டமிடப்படாத செயல்பாடு களும், விதிமீறல்களுமே இந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு காரணம் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே உள் துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் அதற்கு முற்றிலும் முரணாகப் பொதுவெளியில் பேசி சாட்சிகளைத் திசைதிருப்ப முயன்றுள்ளார். எனவே அவர் மீது சி.பி. ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர்-அமைச்சர் ஆனந்த், இணை செயலாளர் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சரின் தனி செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் குற்றவாளிகள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சாட்சி களைச் சிதைக்கக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டுப்பாடுகளும் அவர்கள் மீது விதிக்கப்பட வில்லை. எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்து, சாட்சிகளை அச்சுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய பிணைப் பத்திரங்களை எழுதி வாங்கவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மணுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கை அடங்கிய மனுவை டெல்லி சி.பி.ஐ. இயக்குனர் அலுவலகத்துக்கும் ஆர்.எஸ்.பாரதி அனுப்பி வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories