தமிழ்நாடு

“கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது..” : சென்னை பல்கலை. விழாவில் முதலமைச்சர் உரை!

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கல்வியில் சிறந்த மாநிலமாக 
தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது..” : சென்னை பல்கலை. விழாவில் முதலமைச்சர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னைப் பல்கலைக்கழகத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு ஆற்றிய உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாடினார் மகாகவி பாரதியார்.

அதற்கு எடுத்துக்காக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து கோலோச்சி வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC) “சிறந்து விளங்கும் திறன்கொண்ட பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அடைமொழியினை சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத் தந்துள்ளது.

“கல்வியில் சிறந்த மாநிலமாக 
தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது..” : சென்னை பல்கலை. விழாவில் முதலமைச்சர் உரை!

அத்தகைய சிறந்து விளங்கும் திறன் கொண்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் வருகை தந்தது – இந்தப் பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாளாக இதனை மாற்றி அமைத்துள்ளது.

இந்தியக் குடியரசுத் தலைவர்களாக இருந்த

* சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் -

* வி.வி.கிரி அவர்கள் -

* நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் -

* ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் -

* ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் - என ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக் கழகம் சென்னைப் பல்கலைக்கழகம்.

நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் அவர்கள் படித்த பல்கலைக்கழகம் இது.

நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் உட்பட பல தலைசிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். இன்று முதலமைச்சராக உங்கள் முன் உரையாற்றும் நானும் இதே பல்கலைக்கழகத்தை சார்ந்தவன் தான். அந்த வகையில் உங்கள் சீனியராகவும் நான் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ளேன்.

“கல்வியில் சிறந்த மாநிலமாக 
தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது..” : சென்னை பல்கலை. விழாவில் முதலமைச்சர் உரை!

கடந்த 165 ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. அந்தக் காலத்தில் இருந்தது சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும்தான்.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் சென்னைக்கு வெளியே சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன.

தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில்தான் உள்ளன.

தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன.

தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளன.

100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளன.

40 பல்மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளன.

30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளன.

30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளன.

இப்படி நான் அடுக்கிக் கொண்டே போக முடியும். கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணம்.

“கல்வியில் சிறந்த மாநிலமாக 
தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது..” : சென்னை பல்கலை. விழாவில் முதலமைச்சர் உரை!

பள்ளிக் கல்வியை வளர்த்தார் பெருந்தலைவர் காமராசர் அவர்கள். கல்லூரிக் கல்வியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விரிவு செய்தார். இன்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். ஆராய்ச்சிக் கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தனி திறமையானவர்களாக வளர்த்தெடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள்களைப் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் எனது கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டம் சிறந்து விளங்கி வருகிறது. ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறனில் மேம்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு.

மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் அவர்களது துறைசார்ந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் இந்தத் திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக வழங்கப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்களின் புதிய ஆராய்ச்சிச் சிந்தனைகளுக்குப் புத்துயிர் வழங்கும் விதமாக “முதலமைச்சரின் ஆராய்ச்சித் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கென தமிழ்நாடு அரசால் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

“கல்வியில் சிறந்த மாநிலமாக 
தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது..” : சென்னை பல்கலை. விழாவில் முதலமைச்சர் உரை!

“தமிழ்நாட்டின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில்சார் சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. “தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்”என்ற புதிய சீர்மிகு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிக்குள் நுழையும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் விதமாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” எனும் புதுமைப்பெண் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி பெண்கல்வியை ஊக்குவித்து வருகிறோம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப் பணித் தேர்வுகள், திறன்சார்ந்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்யும் பொருட்டு மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கழக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை வந்தபோது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த திருமதி ஹிலாரி கிளிண்டன் அவர்கள் பார்த்து பாராட்டிய நூலகம் அது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் மாணவ சக்தியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சிகள்!

குறிப்பாகச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

“கல்வியில் சிறந்த மாநிலமாக 
தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது..” : சென்னை பல்கலை. விழாவில் முதலமைச்சர் உரை!

* சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் நவீன வசதிகளுடன் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

* 3000 பேர் அமரும் வகையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டடமும் புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட உள்ளது.

* சேப்பாக்க வளாகத்தில் மாணவியர்களுக்கான புதிய விடுதியும் கட்டப்படவுள்ளது.

* சென்னை பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழில் வழிகாட்டு மையத்துக்கு ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து 50 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

* பயிலும்போதே பணி என்ற திட்டம் அமலில் உள்ளது.

* “திருக்குறள் காட்டும் தொழில்நெறி” மற்றும் “சமூகநீதி” ஆகிய புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. - இது போன்ற சிறப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து எடுத்து தன்னை புதுப்பித்துக் கொள்ளும் நிறுவனமாக சென்னைப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது.

* இன்று பட்டம் பெறுகின்ற மாணவச் செல்வங்களாகிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் வள்ளுவரின் இந்தக் குறள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” உங்களின் அறிவு, தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கவேண்டும். பட்டம் வாங்குவதோடு உங்களது படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஒரே பட்டத்துடன் நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். தகுதியான வேலை கிடைத்த பிறகும் படிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.

யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். அது அறிவியல் வழிப்பட்டதாக, பகுத்தறிவாக எதையும் கேள்வி கேட்டு ஆராயும் அறிவாக இருக்குமானால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. நீங்கள் இன்று பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர்கள் எத்தகைய மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அடைகிறார்களோ, அதே அளவு மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனாக உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.

இன்று உங்கள் குடும்பத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள நீங்கள், எதிர்காலத்தில் நமது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இதேபோல பெருமைத்தேடித் தர வேண்டும், அதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நிதி ஆதாரப் பெருக்கத்திற்கும் தமிழ்நாடு அரசும் உயர்கல்வித் துறையும் என்றென்றும் துணை நிற்கும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தை உலகளாவிய நிலையில் உயர்நிலைத் தகுதியில் இடம்பெறச்செய்ய இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். ”எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories