தமிழ்நாடு

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

எழுத்தாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் எழுதிய 'கலைஞர் மு. கருணாநிதி வரலாறு' மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய 'திராவிடமும் சமூக மாற்றமும்' நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவர், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் திரு. என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப்படத்தையும் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர், 'கலைஞர் மு. கருணாநிதி வரலாறு' மற்றும் 'திராவிடமும் சமூக மாற்றமும்' ஆகிய 2 நூல்களும் அறிவு கருவூலங்கள்; போர் வாள்கள் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "தலைவர் கலைஞரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையான நூல்களில் இந்த நூலும் நிச்சயமாக இடம்பிடித்திருக்கிறது.

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

ஏனென்றால் இது விமர்சனப் பார்வையுடன் அமைந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பொதுப்படையான அரசியல் வரலாற்று ஆய்வாளர்களும் படிக்கத் தக்க வகையில் செம்மையாக எழுதப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நம்முடைய இந்து ராம் அவர்கள் சொன்னதுபோல, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த நிலைப்பாடுகள் பற்றி விரிவாக தனது நேரடி அனுபவங்களின் மூலமாக நம்முடைய பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார்.

'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்று பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகத்தைக் காட்டி, "எனக்கும் இங்கேதான் உறங்க வேண்டும்" எனக் கலைஞர் அவர்கள் மிக உணர்ச்சிவயமாகச் சொல்லும் பகுதி இந்த நூலில் வருகிறது. அதைப் படிக்கும்போது தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, அவர் விரும்பிய இடத்தைப் பெற்றுத் தர நடத்திய போராட்டம் இன்றைக்கும் என்னுடைய கண்முன் வருகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் யார் என்பதை இந்த நூலின் ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார். நவீன தமிழகத்தை உருவகப்படுத்தினால் அதுதான் கலைஞர் என்று சொல்கிறார். இதைவிட யாராலும் சரியாக சொல்ல முடியாது.

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் அறிய வேண்டுமா? கலைஞரைப் பற்றிப் படித்தால் மட்டுமே போதும். தலைவர் கலைஞர் அவர்கள் பல்லாயிரக்கணக்கான தனிமனிதர்களோடு தனது தனிப்பட்ட உறவைப் பேணி வளர்த்து வந்திருக்கிறார், ஒவ்வொருவருக்கும் கலைஞரைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது என்கிறார்.

நிலப்பிரபுத்துவக் காலக்கட்டத்தில் திருக்குவளை என்ற சிறு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவன் - நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கும் சிற்பியாக எப்படி மாறினான் என்பதை முழுமையாகச் சொல்லும் முதன்மை நூல்தான் இந்த நூல். இடையிடையே கலைஞருக்கும் ஏ.ஏஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கும் உரையாடல்கள் பல வருகின்றன. இது மிக அருமையாக இருக்கிறது. கலைஞரைப் பற்றிய பிற நூல்களில் இருந்து இந்த நூல் வேறுபடுவதற்கும், மேம்பட்டதாக இருப்பதற்கும் இது ஒரு முக்கியக் காரணம்.

''ஒவ்வொருவருக்கும் 3 வாழ்க்கை உண்டு. ஒன்று பொதுவாழ்க்கை, இரண்டாவது தனி வாழ்க்கை, மூன்றாவது ரகசியவாழ்க்கை...'' என்று கொலம்பியா எழுத்தாளர் மார்க்வேல் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மார்ட்டின் கூறியதை பன்னீர்செல்வன் தலைவர் கலைஞரிடத்திலே சொல்லியிருக்கிறார்.

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அப்போது கலைஞர் அவர்கள், 'பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நான்காவதாக ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதுதான் அவர் வாழ விரும்பிய வாழ்க்கை' என சொல்லியிருக்கிறார். எவ்வளவு ஆழமான, அழகான கருத்து.

ஒருவர் எழுதும் தன் வரலாறு நூலில் அந்த நான்காவது வாழ்க்கை பற்றிப் புலப்படும்" என்று கலைஞர் கூறுகிறார். அதற்கு, 'உங்கள் நூலில் நீங்கள் வாழ விரும்பிய வாழ்க்கையை விவரிக்கும் பகுதி எது?' என்று பன்னீர்செல்வன் கேட்கிறார். அப்போது கலைஞர் சொல்கிறார், 'அதை நீயே கண்டுபிடித்துக்கொள்' என்கிறார் கலைஞர்.

தலைவர் கலைஞர் அவர்கள் வாழ விரும்பிய வாழ்க்கை என்ன என்று நான் சிந்தித்தேன்... தான் இல்லாத பிறகும் தான் நினைக்கப்பட வேண்டும் என்பதுதான் கலைஞர் அவர்கள் விரும்பிய வாழ்க்கையாக இருக்கக்கூடியது. அதற்கான உழைப்பைத்தான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் அளித்தார். இதை வைத்துப் பார்க்கும்போது கலைஞர் அவர்களது வாழ்க்கை நிகழ்காலத்தில் நிறைவாகவே இருக்கிறது.

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இந்நூலை எழுதியமைக்காக ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய பாராட்டுதல்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரது வாழ்க்கை மூலமாக தமிழ்நாட்டைப் பார்க்கும் வகையில் பன்னீர்செல்வன் அவர்களின் நூல் அமைந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சியின் வழியாக திராவிட இயக்கத்தைப் பார்க்கக்கூடிய நூலாக ஜெயரஞ்சன் அவர்களுடைய நூலும் அமைந்திருக்கிறது.

தான் இதுவரை எழுதிய சில கட்டுரைகளை மொழிபெயர்த்து 'திராவிடமும், சமூக மாற்றமும்' என்ற தலைப்பில் ஜெயரஞ்சன் அவர்கள் புத்தகமாக கொண்டு வந்துள்ளார். இதனைக் கயல்-கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திராவிடமும் சமூகமாற்றமும் என்பது இந்த புத்தகத்தின் தலைப்பு. திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான். சமூக மாற்றம் என்றாலே அது திராவிடத்தால் விளைந்ததுதான். அவரது ஆய்வுக் கட்டுரைகள் அனைத்துமே கிராமத்தை, கிராமப்புற மக்களைப் பற்றியதாகவே அமைந்துள்ளது. பல கிராமங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி, இவை திராவிட இயக்கம் கொண்டு வந்த பல்வேறு சமூகநலத் திட்டங்களால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மிகச் சரியாக அவர் சொல்லி இருக்கிறார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கியும், அதிகப்படியான பொதுவிநியோகக் கடைகளைத் திறந்தும் - தலைவர் கலைஞர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்கள் சமூகமாற்றத்துக்கு வழிவகுத்ததை ஆதாரங்களுடன் ஜெயரஞ்சன் அவர்கள் இதிலே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதேநேரத்தில் நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதையும் ஜெயரஞ்சன் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

''சமூகச் சீர்திருத்தத்தை முன்வைத்துப் போராடிய தந்தை பெரியார் வழிவந்த அரசியல் கட்சிகள் பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆண்டாலும் தீண்டாமை நீடிக்கவே செய்தது" என்று தனது நூலில் 77-ஆவது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அந்த ஆயிரம் ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல. அதனை நாமும் அறியாதவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம்.

அதனால்தான், சாதியின் பேரால் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது – தெருவில், கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. கல்வியும் படிப்பும், வேலையும் பதவியும் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் லகானைக் கொடுத்துவிட்டது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றம்!

கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என பலவும் ஜனநாயக மயமானது. இந்த முன்னோக்கிய பாய்ச்சலில்தான் சமூகம் ஜனநாயக மயமாக வேண்டும். நமது திராவிட மாடல் கொள்கையில் அதனைத்தான் சொல்லி இருக்கிறோம். கல்வியில், தொழிலில், உள்கட்டமைப்பில், சிந்தனையில் மட்டுமல்ல, சமூகத்திலும் சேர்த்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி என்று சொல்லி இருக்கிறோம்.

''கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பற்ற அரசியலுக்கும் இனி ஆற்றல் அற்றுப் போகும்" என்று 1991-ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ.இராமசாமி சொன்னதாக பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார்.

கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பின்மைக்கும் -சுயமரியாதைக்கும்- மாநில சுயாட்சிக்கும்- மொழி இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப் போகாது என்பதன் அடையாளம்தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி.

“திராவிட இயக்க எழுச்சியை அறிய கலைஞரைப் பற்றி படித்தால் மட்டுமே போதும்..!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

ஆற்றல் அற்றுப் போய்விடவில்லை என்பதன் அடையாளம்தான் இத்தகைய புத்தகங்கள். சுயமரியாதை - சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். இத்தகைய சிந்தனைகளை விதைக்கவும் உருவாக்கவும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் போல, ஜெயரஞ்சன் போல ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை. இதுபோன்ற புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதிகம் தேவை.

ஜெயரஞ்சன் அவர்கள் ஏற்புரையாற்றும்போது குறிப்பிட்டுச் சொன்னார், ‘நீங்கள் கட்டளையிடுங்கள் என்று’ கட்டளையிட வரவில்லை, உங்களோடு சேர்ந்து பணியாற்ற வந்திருக்கிறோம்.

அதே நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோளாக, தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்திலும் - ஆங்கிலப் புத்தகங்களை தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். அதுதான் உங்களுக்கு இருக்கக்கூடிய பெரும் கடமை. எனவே, இந்த நூல் வெளியீட்டு விழா என்பது உங்களது அறிவிப் பணியினுடைய தொடக்கக் காலம்தான். உங்களது அறிவுப்பணியை நீங்கள் இருவரும் மேலும் இதே வீரியத்தோடு மேலும் தொடர வேண்டும் என்று உரிமையோடு கேட்டு வாய்ப்பிற்கு நன்றிகூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

banner

Related Stories

Related Stories