திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.
இந்த நிலையில் காவல்துறை மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்க்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை, நிகழ்ச்சி இரவு நேரம் நடப்படுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க வில்லை, நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை , பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கவில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுத்தது.
மேலும் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு (30) 2 அமலில் இருப்பதாக கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாக கூறிய காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர் . இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்த வந்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எச். ராஜாவை பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100 கும் மேற்பட்ட போலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து போலிஸாருடன் எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சீருடை அணிந்திருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாக பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே கைது செய்யப்பட்ட எச் ராஜா, தான் இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புவதாகச் சொல்லி ட்விட்டரில் மாலை 5.30 மணியளவில் பதிவிட்டிருந்தார். ஆனால் அவரை காண ஓரிருவர்களே வந்ததால் வழக்கம் போல எச்.ராஜா மூக்குடைப்பட்டிருக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.