
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.3.2026) மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகர் முதல் பிரதான சாலையில் மீட்டெடுக்கப்பட்ட குளத்தை 4.88 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நடைபாதை பூங்கா”வை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன போரூர் மருத்துவமனை சாலையில் 2.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நவீன கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டடம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்து பார்வையிட்டு, வாசகர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன நொளம்பூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலைகளை இணைக்கும் வகையில் 135.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 245 மீட்டர் நீளத்தில் நான்கு வழி பாதையுடன் கட்டப்பட்ட புதிய பாலத்தை திறந்து வைத்து, நடந்து சென்று பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நொளம்பூரில் கூவம் ஆற்றங்கரையில் ஓம்சக்தி நகர் புதிய பாலம் முதல் நொளம்பூர் யூனியன் சாலை மயானபூமி வரையிலான 890 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் அடையாளம்பட்டு சர்வீஸ் சாலை முதல் நொளம்பூர் சாணக்கிய பிரதான சாலை சந்திப்பு வரையிலான 1,200 மீட்டர் நீளத்திற்கு சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

=> எஸ்.வி.எஸ். நகர் முதல் பிரதான சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் குளம் :
வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர் முதல் பிரதான சாலையில் 4.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16,396.13 சதுர மீட்டர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா எஸ்.வி.எஸ். நகர் முதல் பிரதான சாலை மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 11,454.03 சதுர மீட்டர் நீர் பரப்பளவுடன், குளத்தின் மையப் பகுதியில் பறவைகள் தீவு, நடைபாதை, கூழாங்கற்கள் மற்றும் கரடுமுரடான தரைத்தளத்தை கொண்ட ரிஃப்ளெக்சாலஜி நடைபாதை, உள்ளூர் வகை மரங்கள், செடிகள் மற்றும் புல்வெளிகளுடன் பசுமைப் பரப்பு, வெளிப்புற உடற்பயிற்சிக் கூடம், சிறிய கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திறந்தவெளி திரையரங்கம், ஓய்வெடுப்பதற்காக சிறிய நிழற்குடை, பாலம், சுற்றுச்சுவர், வாகன நிறுத்துமிடம், நுழைவாயில், படகு சவாரி தளம், இருக்கைகள், கழிப்பறை வசதிகள், மின்விளக்கு வசதிகள், கண்காணிப்புக் கேமராக்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், பராமரிப்பாளர் மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

=> சின்ன போரூர் மருத்துவமனை சாலை - கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் :
சின்ன போரூர் மருத்துவமனை சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 2.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் 6,160 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் நூலகம், முதல் தளத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில், கழிப்பறை, பராமரிப்பாளர் அறை மற்றும் பாதுகாப்பு காவலர் அறை, நூலகம் உள்ளடக்கிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் 863 சதுர அடி பரப்பளவில் அழகு பயிற்சி மையம், 1,100 சதுர அடி பரப்பளவில் தையல் பயிற்சி மையம், இருசக்கர வாகன நிறுத்துமிடம், கார் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கண்காணிப்புக் கேமராக்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகம் மூலம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குடிமைப் பணிக்கு தயாராகும் மாணவர்கள், முதியவர் மற்றும் அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலைகளை இணைக்கும் வகையில் 135.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 245 மீட்டர் நீளத்தில் நான்கு வழி பாதையுடன் கட்டப்பட்ட புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் மதுரவாயல், நொளம்பூர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.






