தமிழ்நாடு

தோல்வியின் மொத்த உருவமே பச்சைப் பொய் பழனிசாமிதான்.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பச்சைப் பொய் பழனிசாமி தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலையை சந்திசிரிக்க வைத்ததோடு பொது அமைதியையும் பாழடித்து விட்டார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தோல்வியின் மொத்த உருவமே பச்சைப் பொய் பழனிசாமிதான்.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

``பச்சைப் பொய் பழனிசாமி தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலையை சந்திசிரிக்க வைத்ததோடு பொது அமைதியையும் பாழடித்து விட்டார்’’ என்றுகழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ``உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’’ என்றகாணொலி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.

நேற்று (13-02-2022) மாலை - காணொலிவாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

முதல்வர் அவர்கள் ஆற்றிய உரையின்விவரம் வருமாறு:

முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால்தான், அது முழுமையான வெற்றியாக, மகத்தான வெற்றியாக இருக்கும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகின்ற நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம்முடைய கையில் இருக்க வேண்டும்.கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், நம்முடைய மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும்.

நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை! உள்ளாட்சித் தேர்தலையே நடத்த மனமில்லாமல் நாட்களைக் கடத்திக் கொண்டு போன ஆட்சிதான்- அ.தி.மு.க. ஆட்சி. உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தி.மு.க.வினர் வெற்றி பெற்றிடுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்றுவந்தால், அ.தி.மு.க.வினருடைய ஊழல்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார்கள்என்று, அஞ்சி நடுங்கி, உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான்-அ.தி.மு.க. ஆட்சி.

அன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி. அவரைப் பற்றி எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். சுண்ணாம்பு பவுடர்வாங்குவதில் இருந்து, பினாயில் வாங்குவது வரைக்கும் ஊழல் செய்த, ‘கறை படிந்த கைகளுக்குச் சொந்தக்காரர்! உள்ளாட்சி அமைப்புகளில் நடந்திருக்கின்ற ஊழல்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், டேனியல் ஜேசுதாஸ் என்பவர் பல தகவல்களை வாங்கி அப்போதே வெளிப்படுத்தியிருக்கிறார். 25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர், தனியார் கடைகளில் 170 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் 842 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்! பினாயில் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு கடையில் கிடைக்கிறது. அதை130ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்!

சாக்கடைஅடைப்பை சரி செய்யும் டிச்சு கொத்து, அதோட விலை 130 ரூபாய். ஆனால் அதை 1,010 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்! 1,500 ரூபாய் மதிப்புள்ள மோட்டாரை, 29 ஆயிரத்து 465 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்! 1,712 ரூபாய் மதிப்பிலான காப்பர் வயரை, 8,429 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 870 ரூபாய் மதிப்பிலான லைட் ஃபிட்டிங்கை, 2,080 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இவ்வாறு பொருட்கள் வாங்குவதில் மட்டும் ஒரு ஊராட்சிக்கு 1 கோடி ரூபாய் கொள்ளை அடிச்சிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 12 ஆயிரம் ஊராட்சிகளில், மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, டேனியல் ஜேசுதாஸ் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அன்று அமைச்சராக இருந்த வேலுமணி பதில் சொல்லவில்லை. சொல்லக்கூடிய காலம் ரொம்ப தொலைவில் இல்லை!

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள், பல்வேறு ஆதாரங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தார். தன்னைப் பற்றி எழுதவே கூடாது என்று மகாயோக்கியரைப் போலக் கூச்சலிட்டவர்தான் வேலுமணி. இதையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளோட பிரதிநிதிகள் கேள்வி கேட்பார்கள் என்று உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இருந்தார்கள். நான் சொன்னது- ஒரே ஒரு எடுத்துக்காட்டு தான்! இப்படி, சென்னை மாநகராட்சியாக இருந்தாலும், மதுரை மாநகராட்சியாக இருந்தாலும், நகராட்சி அமைப்புகளாக இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் மலையளவு ஊழல்கள் செய்யப்பட்டன! இது எல்லாம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம், அவர்கள் ஆட்சியில் இருந்த போதே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. இப்போது கழக ஆட்சியில் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்தி- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தோல்வியின் மொத்த உருவமே பச்சைப் பொய் பழனிசாமிதான்.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் 346 கோடி ரூபாய் ஊழல் செய் திருக்கிறதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருடைய உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுடைய வருவாய், சில ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு உயர்ந்திருக்கிறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கிற முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. ‘தினம் ஒரு பொய்’ பழனிசாமி!

கடந்த 2014 முதல், அனைத்து ஒப்பந்தங்க ளையும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்க ளுக்கோ அல்லது தன்னுடைய பினாமிகளுக்கோ மட்டுமே கொடுத்திருக்கிறார் வேலு மணி என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியவந் திருக்கிறது. இவர்களுக்கு சென்னை, கோவை மாநகராட்சிப் பணிகள் அனைத்தும் விதிமுறைகளை மீறித்தரப்பட்டிருக்கிறது. இதனுடைய மதிப்பு 811 கோடி ரூபாய். தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுகிறதிட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக வேலுமணிக்கு எதிராக, இப்போது பேரவைத் தலைவராக இருக்கின்ற அப்பாவு அவர்கள் புகார் அளித்திருந்தார். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்ட லட்சணம்!

இதேமாதிரி மீண்டும் ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்த முடியுமா என்ற ஏக்கத்தோடுதான் ‘தினம் ஒரு பொய்’ நிகழ்ச்சியை, காமெடியாக நடத்திக் கொண்டு இருக்கிறார் திருவாளர் ‘பச்சைப் பொய்’பழனிசாமி. அ.தி.மு.க.வுக்கு அளிக்கிறவாக்கு என்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கு! லஞ்ச லாவண்யத்துக்கு அளிக்கின்ற வாக்கு! அராஜகங்களுக்கு அளிக்கின்ற வாக்கு! இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சுத்தமாகச் சீரழித்த ஆட்சிதான்- அ.தி.மு.க. ஆட்சி. இரண்டு டி.ஜி.பி.க்களை போட்டு, இரட்டை தலைமை ஆக்கி, தமிழ்நாடு காவல் துறையையே களங்கப்படுத்திய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. பரமக்குடி துப்பாக் கிச் சூட்டில் 6 பேரைகொன்றது அ.தி.மு.க. ஆட்சி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை கொன்றது அ.தி.மு.க. ஆட்சி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை யில் வேடிக்கை பார்த்து, கல்லூரி பெண்களைக் கதறவிட்ட ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி!

பெண் எஸ்.பிஇருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி, பெண் போலீஸ் எஸ்.பி. களுக்கே பாதுகாப்பு இல்லை என்றஅவல நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. ஆட்சி. சென்னை தலைமைச் செயலகத் தில், வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது அ.தி.மு.க. ஆட்சி யில்தான். பதவியிலிருந்த டி.ஜி.பி. வீட்டில், குட்கா வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது அ.தி.மு.க. ஆட்சியில் தான்! சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகனை அடித்தே கொன்ற ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி! அதுவும் திருவாளர் ’பச்சைப் பொய்’ பழனிசாமி ஆட்சி தான்! கழகக் காளையாக களத்தில் நின்ற, எனது அன்புக் குரிய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் அவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் போலீசையும் விட்டு வைக்கவில்லை. உதவி ஆய்வாளர் வில்சன்- கன்னியாகுமரியில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். திருப்பாச்சேத்தி காவல் நிலைய எஸ்.ஐ. ஆல்வின்சுதன்- அ.தி.மு.க. ஆட்சியில்தான் வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை குலைத்து, பொது அமைதியைக் கெடுத்து ஆட்சி நடத்திய பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் கம்பெனிக்கு, திமுக ஆட்சி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

கூவத்தூரில் தவழ்ந்து பழனிசாமி பெற்ற ஆட்சி, மக்களால் தூக்கியெறியப்பட்டு ஒன்பது மாதகாலம் ஆகிறது. அவரோட கோமாளி கூத்துகளை, ஊழல் விளையாட்டுகளை மக்கள் மறந்துவிட்டு இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓட வைத்த மாதிரி பழனிசாமி பேசுகிறார். திருவாளர் ‘பச்சைப் பொய்’பழனிசாமி அவர்களே!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற மக்களுடைய துயரத்தைப் போக்குகிற வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு, தலா 4000 ஆயிரம் ரூபாய் கொடுத்தது யார்? இந்தத் தி.மு.க. ஆட்சி! ஆவின் பால் விலையை, லிட்டர்ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்ததுநீங்களா? தமிழ்நாட்டுத் தாய்மார்களின் சகோதரனான நான்! அரசுக் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம்இல்லாமல் பயணம் செய்வதற்கானஉத்தரவில் கையெழுத்து போட்டது யார்? மகளிர் உரிமைக்காக தொடர்ந்து போராடுகிற, வாதாடுகிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கின்ற என்னுடைய கையெழுத்து!

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம்- யார் கொண்டுவந்த திட்டம்? மக்களிடம் கேளுங்கள், இந்த ஸ்டாலின்தான் என்று சொல்லுவார்கள்! ‘மக்களைத் தேடி மருத்துவம்’- உங்கள் சாதனையா? ‘இல்லம் தேடிக் கல்வி’- ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’- ‘நமக்கு நாமே திட்டம்’- ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’- இதெல்லாம் செய்தது யாருடைய ஆட்சி? பதில் சொல்லத் திராணி இருக்கிறதா? சமத்துவத்தை நோக்கிய மாபெரும் திட்டமான ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை’ கொண்டு வந்தது யார்? மக்களிடம் கேளுங்கள், திருவாளர் ‘பச்சைப் பொய்’ பழனிசாமி அவர்களே!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுடைய இன்னலைக் குறைக்கின்ற வகையில், அதற்கான கட்டணத்தைதமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் என்று கையெழுத்து போட்டது யார்? இந்தத் திட்டத்தால் பயன் அடைந்த உங்க கட்சிக்காரர்களிடமே கேளுங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின்தான் என்று தெளிவாக சொல்லுவார்கள்!

கொரோனா கால நிவாரணமாக, 13 பொருட்களை- 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு நீங்களா கொடுத்தீர்கள்? 18 லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுகிற வகையில், அவர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது இந்த ஆட்சியிலா? உங்கள் ஆட்சியிலா? 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன் பெற்ற, 13 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங் களுக்குக் கடன் ரத்து செய்தது யாருடைய சாதனை? மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான- 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் ரத்து செய்தது யார்?மணிக்கணக்காக நின்று கொண்டே சுழல்நிதி வழங்கி, பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டுச் சகோதரிகளோட முன்னேற்றத்துக்காக திட்டங்களை கொண்டுவந்தது இந்த அடியேன் ஸ்டாலின்தான்.

உருப்படியாக எந்த இடத்திலும் அமையாத ‘மினி கிளினிக்’ பழனிசாமி அவர்களின் சாதனை என்னஎன்று யாராவது கேட்டால், ‘மினி கிளினிக்’என்று சொல்லுவார். ஆனால், உருப்படியாகஎந்த இடத்திலும் அவர் மினி கிளினிக் அமைக்கவில்லை! அம்மையார் ஜெயலலிதாஏற்கனவே அறிவித்த, குறைகளைச் சொல்லமுதலமைச்சருக்கு போன் செய்கிற திட்டத்துக்கு, தன்னோட இனிஷியலைப் போட்டுக் கொண்டவர்தான் பழனிசாமி! அம்மையார்ஜெயலலிதா பேரில் பல்கலைக்கழகம் என்றுஅறிவித்தார். அதற்காகக் கட்டப்பட்டகட்டடத்தினுடைய புகைப்படத்தை காட்டுங்கள் பார்க்கலாம் ‘பச்சைப் பொய்’ பழனிசாமி.அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டுக்கு ”விஷன்-2023” என்று ஒரு திட்டத்தை அறிவித்தார்.2012-ஆம் ஆண்டு அந்தக் கொள்கையை வெளியிட்டார்.

தனிநபர் வருமானத்தை உயர்த்துவேன். 15 லட்சம் கோடிக்கு உள்கட்டமைப்புத் திட்டங்கள்.2 கோடி பேருக்கு வேலைகள். தமிழ்நாட்டில் இரண்டு மருத்துவநகரங்கள் உருவாக்கப்படும்.கோயம்புத்தூர்-மதுரை, கோயம்புத் தூர்-சேலம் இன்டஸ்ட்ரியல் காரிடார் அமைக்கப்படும்.இதில் எதாவது ஒன்றை, கடந்த 9 ஆண்டுகளில் நிறைவேற்றினார்களா?அம்மையார் ஜெயலலிதா அவர்கள், முதல்உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த2015-ஆம் ஆண்டு நடத்தினார். அதில், 98புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகஅறிவித்தார். 2 லட்சம் கோடி ரூபாய்முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக சொன்னார். 4லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்போகிறது என்று சொன்னார். இதெல்லாம்எங்கே?

தோல்வியின் மொத்த உருவமே பச்சைப் பொய் பழனிசாமிதான்.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள்மாநாட்டை பழனிசாமி நடத்தினார். 304புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னார். 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார். 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப் போகிறதாக சொன்னார். ஆனால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை! அடுத்ததாக, 13 நாள் வெளிநாட்டு சுற்றுலா சென்றார் பழனிசாமி. 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னார். 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று சொன்னார். 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொன்னார். ஆனால், முதலீடும் இல்லை. வேலையும் இல்லை!

கொரோனா காலத்தில் 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுவிட்டதாகச் சொன்னார். 88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என்று சொன்னார். ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது என்று சொன்னார். இதில் எதாவது நடந்ததா? தோல்வி! தோல்வி! தோல்வி! தோல்வியின் மொத்த உருவமாகக் காட்சியளிக்கிறார் பழனிசாமி! கடந்த 2021-ஆம் ஆண்டுகூட, புதிய தொழிற்கொள்கை என்று ஒன்றை வெளியிட்டார். 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டப்போகிறேன் என்று சொன்னார். எதுவும் நடக்கவில்லை! இவ்வாறு பொய்யாகப் பேசிக்கொண்டு ஏமாற்றுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், மக்களே அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

தன்னுடைய கற்பனை வளத்தை வளர்த்துக் கொண்டுபுது புது பொய்களை- ‘பச்சைப் பொய்’ பழனிசாமி அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார் நாம் மக்களுக்காக ஆற்றிவரும் பணிகளை நான் தொடர்ந்து பதிவு பண்ணிக்கொண்டு வருகிறேன். ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசுஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75 விழுக்காடுஅறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.தேர்தல் வாக்குறுதி- நிதிநிலை அறிக்கை-110 விதிகள் என்று மொத்தம் 1,641அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணைபிறப்பிக்கப்பட்டு, 75 விழுக்காட்டுக்கும் மேலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.நேரத்தின் அருமை கருதி, சுருக்கமாகசில பணிகளை மட்டும் சொல்கிறேன்.

வடகிழக்குப் பருவ மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்- 132 கோடியே 12 லட்சம் ரூபாய்.இல்லம் தேடிக் கல்வி திட்டம்- 200 கோடி ரூபாய் ரூபாய். மக்களைத் தேடி மருத்துவ திட்டம்- 257 கோடி ரூபாய். மாநிலப் பேரிடர் நிதி மூலம் பேரிடருக்கு ஒதுக்கப்பட்ட தொகை- 801 கோடி ரூபாய். சென்னை மழை வெள்ள நீர்த்தடுப்புத் திட்டம்- 1000 கோடி ரூபாய்.காவிரி தூர் வாருதல் பணி- 61 கோடி ரூபாய். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, 1500 ரூபாயிலிருந்து 2000 ஆயிரமாக உயர்த்திட 123 கோடியே 75 லட்சம் ரூபாய். திரட்டப்பட்ட முதலீடுகள்- 56 ஆயிரத்து 230 கோடி ரூபாய். உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள்- 1 லட்சத்து 74 ஆயிரத்து 999. 52 மணி நேர ”ஆப்பரேசன் டிஸ் ஆர்ம்” மூலம் சுற்றி வளைக்கப்பட்ட ரவுடிகள்- 6,112. மழை வெள்ளப்பாதிப்புகள் வந்தபோது, சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கு பகல் இரவு பாராமல் மழை கோட் போட்டு, குடைபிடித்தபடி சென்றேன். மக்கள் சொன்ன நன்றி!

காஞ்சிபுரத்திற்குச் சென்றேன். திருவள்ளூருக்குச் சென்றேன். கடலூர்,கன்னியாகுமரி, தூத்துக்குடி என்று பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் தண்ணீரில் மூழ்கிய பகுதிகளுக்கும் சென்றேன். தண்ணீரை அரசு அதிகாரிகள் நீக்கிய பிறகும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். சென்னையில் ஒரு இடத்திற்கு நான் சென்றபோது, தண்ணீர் வெளியேற்றப்படவில்லை என்று மக்கள் புகார் சொன்னார்கள். இரண்டே நாளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மீண்டும் அங்கே சென்றபோது, மக்கள் எனக்கு நன்றி சொன்னார்கள். பொங்கல் பரிசு பொருட்கள் தரும் ரேசன் கடைகளுக்கு சென்று, பொருட்கள் தரமாக இருக்கிறதா என்று பொதுமக்களிடம் கேட்டேன். நான் எங்கே சென்றாலும், வழியில் என்னைப் பார்க்கக் காத்திருக்கும் மக்களிடம், என்னுடைய வாகனத்தை நிறுத்தி மனு வாங்குகிறேன். என்ன கோரிக்கை என்று கேட்கிறேன். இப்படிப்பட்ட என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்கபயம் என்று சொல்கிறவர்கள், தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்களா? இல்லை கற்பனை முற்றி- வேற்று கிரகத்துக்கே போய்விட்டார்களா? என்ற சந்தேகம்தான்எனக்கு வருகிறது.

இந்தக் காணொலிக் கூட்டங்கள் வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து லட்சம் பேரை ஒரே நேரத்தில் சந்திக்க முடிகிறது. ஒரே நேரத்தில் 500 இடங்களில், 700 இடங்களில் பொதுமக்கள் கூடி என்னுடைய பேச்சைக் கவனிக்கிறார்கள். இது கொரோனா காலம். இலட்சக்கணக் கானவர்களை இப்படி கூட்டி கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை. அதனால்தான் காணொலி மூலமாகச் சந்திக்கிறேன். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், குறை சொல்கிறார்கள்.

நான் தேர்தல் பயணம் கிளம்பி, எல்லா இடத்திலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினால் ‘பார்த்தீர்களா? கொரோனா கால கட்டுப்பாடுகளை முதலமைச்சரே மீறுகிறார். அதிகமான கூட்டத்தைக் கூட்டுகிறார்' என்று அவர்கள் சொல்வார்கள். வயிற்றெரிச்சல் காரர்களது சொற்களையும்- வதந்திகளையும் புறம்தள்ளி, நாம்- நம்முடைய மக்கள் பணிகளைத் தொடர்வோம்.‘என்றைக்கும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ என்ற நிலையை அடைய, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவோம்!

எனவே, ”உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி மலர” திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, தமிழர்களின் இதயசூரியனான உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டு, விரைவில் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள வெற்றி விழாவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திப்பேன் என்ற உறுதியைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories