தமிழ்நாடு

”விரைவில் ரூ.1000 உதவித் தொகை.. வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”விரைவில் ரூ.1000 உதவித் தொகை.. வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

``பச்சைப் பொய் பழனிசாமி தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலையை சந்திசிரிக்க வைத்ததோடு பொது அமைதியையும் பாழடித்து விட்டார்’’ என்றுகழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ``உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’’ என்றகாணொலி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.

நேற்று (13-02-2022) மாலை - காணொலிவாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

முதல்வர் அவர்கள் ஆற்றிய உரையின்விவரம் வருமாறு:

தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில்-இளங்கோவடிகளால் போற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான இந்த திண்டுக்கல்லில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர்- கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அவர் களுக்கும், மாவட்டக் கழகச் செயலாளர் களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய விடுதலைக்காகத் தனித்தனியாகப் போராடிய மன்னர்களும், பாளையக் காரர்களும் இந்த திண்டுக்கல்லுக்கு வந்து ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். வீரம் செறிந்த மண் -இந்த திண்டுக்கல் மண். பெரிய மருதுவும் சின்ன மருதுவும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீரமங்கை வேலுநாச்சியாரும், ஊமைத்துரையும் உலவிய வீரம் செறிந்த மண் - இந்த திண்டுக்கல் மண்!

வீரத்தின் விளைநிலமான இந்த திண்டுக்கல் ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் இருந்தாலும், தனி மாவட்டமாக இருந்தாலும்என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை! திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி உருவாக்கப்பட்டு, அந்த அணியின்செயலாளராக நான் பொறுப்பேற்று, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுக்கும் 1984-ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது முதன்முதலாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற அய்யலூருக்குவந்தேன். அன்று முதல் எத்தனையோ முறை திண்டுக்கல்லுக்கு வந்து சென்றிருக்கிறேன். ஆனால் அதில் என்னால் மறக்க முடியாத பயணம் எது என்று கேட்டீர்கள் என்றால், 2005-ஆம் ஆண்டு திண்டுக்கல் மண்டல மாநாட்டுக்கு வந்ததுதான். கழக வரலாற்றில் மறக்க முடியாத மாநாடு அது!அவ்வளவு சிறப்பாக அன்று நம்முடைய அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அந்த மாநாட்டை நடத்திக் காட்டினார்.

அத்தகைய மாநாடுகளாலும், இந்த தமிழினத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நடத்திய எண்ணற்ற போராட்டங்களாலும், தொண்டர்களுடைய கொள்கை உறுதியாலும், உடன்பிறப்புகளாகிய உங்களுடைய அயராத உழைப்பாலும், இந்த திண்டுக்கல் மாவட்டத்து மக்கள் மனதில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களோட இதயசூரியனாக திராவிட முன்னேற்றக் கழகம் நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த மகத்தான வெற்றியைப் போன்ற வெற்றியைத்தான், நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் பெற்றாக வேண்டும். அப்படி உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியைப் பெறு வதன் மூலமாக, தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களை இன்னும் சிறப்பாக நம்மால்செயல்படுத்த முடியும்.

மாங்கரையாற்றின் குறுக்கே எட்டுபாலங்கள். கொடகனாற்றின் குறுக்கே நான்கு பாலங்கள். திண்டுக்கல் - நத்தம் ரயில்வே மேம்பாலம். திண்டுக்கல் முதல் பழனி வரை பாதயாத்திரை பக்தர்கள் நடப்பதற்கென்று தனியாக 5 கோடி ரூபாய் செலவில் நடைபாதை. கன்னிவாடி நாயோடையின் குறுக்கே அணை. யானைவிழுந்தான் ஓடையின் குறுக்கே அணை. நங்காஞ்சியாற்றின் குறுக்கே அணை. நல்லதங்காள் ஆற்றின் குறுக்கே அணை. சிறுமலையாற்றின் குறுக்கே அணை. சுக்காம்பட்டி, ரெட்டியார் சத்திரம், பஞ்சம் பட்டி, அய்யம்பாளையத்தில் உயர்அழுத்த மின் நிலையங்கள்.

ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழகப் பொறி யியல் கல்லூரி.கன்னிவாடியில் மகளிர் விடுதி மற்றும் மாணவர் விடுதிகள். மருதாநதி அணையில் கிணறு அமைத்து - கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக குழாய் பதித்து- 20 ஆண்டுகால குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு. அய்யங்கோட்டை பொதுமக்கள் மருதா நதி ஆற்றினை கடந்து செல்ல மேம்பாலம். திண்டுக்கல் வட்டத்தை இரண்டாகப்பிரித்து, புதிதாக ஆத்தூர் தாலுகாவை ஏற்படுத்தி, அதற்கான அலுவலகக் கட்டடங்களை கட்டிக் கொடுத்தது -என்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏராளமான சாதனைகளை செய்து கொடுத் ததுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு!

”விரைவில் ரூ.1000 உதவித் தொகை.. வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

கடந்த சில மாதங்களில் செய்திருக்கின்ற பணிகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமூக பொறுப்புநிதி நன்கொடையின்கீழ், 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நிமிடத்திற்கு 600 லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்திக் கலன் அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக் கிறது.

எந்தக் கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்றுஅறிவிப்பு வெளியிடப்பட்டு பழனி முருகன் கோயிலிலும் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அ.கலையம்புத்தூர் ஊராட்சி - ராஜாபுரத்தில் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து, ரூபாய் 19 லட்சத்து 50 ஆயிரம் நிதியில் புதிய சமுதாயக்கூடம் கட்டப் பட்டிருக்கிறது.

பழனிதண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்த மருத்துவம் மேம் படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயக்குடி பேரூராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட் டிருக்கிறது. கொடைக்கானல் மேல்மலை பகுதி யில் 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனம், மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் பட்டிருக்கிறது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் புதிய இருபாலர் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 5 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சுமார் 3 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தொப்பம்பட்டி ஒன்றியம் மரிச்சிலம்பு ஊராட்சியில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் மற்றும்பல்வேறு பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜோகிபட்டியில் சுமார் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜோகிபட்டி - சோழியப்பக் கவுண்டனூர்சாலையை மாவட்டச் சாலையாகத் தரம் உயர்த்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி பட்டியல் போட்டு பணிகளைச் சொல்லுகிற அளவிற்குத் திண்டுக்கல்லில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுமைக்கும் ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம். தொடர்ந்து செய்து வருகிறோம்.

இவற்றையெல்லாம் கழக உடன்பிறப்புகள் அவர்கள் பகுதிகளில் இருக்கின்ற மக்களிடம் - கொண்டு போய் சேர்க்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை முழுதாக அறியாமல் ஆண்டாண்டு காலமாகப் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்ற பொய்களை நம்பி, தமிழர்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்களின் சதிவலையில் சிக்கியிருக்கின்ற சிலரையும்மீட்டாக வேண்டும்! அதற்கு நம்முடைய சாதனைகளை வீதிதோறும்- வீடுதோறும் கொண்டு செல்லுங்கள்! நம்முடைய கொள்கைகளை எடுத்துச்சொல்லுங்கள்! இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அரசியல் மயப்படுத்துங்கள்! இதையெல்லாம் தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்த இனத்தைப் பாதுகாப்பதற்காக நாம்தான் செய்தாக வேண்டும்!

பத்தாண்டுகளாக சீரழிக்கப்பட்ட தமிழ்நாட்டை சீரமைத்தாக வேண்டும். அடகு வைக்கப்பட்ட நம் மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி சீரழித்தநிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வருகிறோம். கடன் மேல கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல்,வட்டி கட்டக் கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டி என்று தமிழ்நாட்டை 5 லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டைத் தள்ளி, கஜானாவை கபளீகரம் செய்து காலி பண்ணிட்டார்கள்.

இந்த நிலையில் இருந்து மீட்டு, விரைவில் ‘மகளிர் உரிமைத் தொகையான’- மாதம் 1000 ரூபாயையும் வழங்கப் போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப் போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாகத் தெரியும். நான் காணொலியில் உங்களைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.

மக்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்காக, நான் காணொலியில் பரப்புரை செய்வதாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.அவங்களுடைய கற்பனைத் திறனைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.இந்த ஸ்டாலின் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவன். வீதிவீதியாக மக்களிடம் நடந்து சென்று வாக்குச் சேகரித்தவன். மக்களுக்கு- எங்கே எப்போது பாதிப்பு என்றாலும், நேரடியாகஅந்த இடத்திற்குச் சென்று மக்களைச்சந்திக்கின்றவன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories