தமிழ்நாடு

வலுப்பெறும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு.. முதல்வரின் கடிதத்தை ஏற்று கூட்டமைப்பில் இணைந்த காங்கிரஸ்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஏற்று அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது.

வலுப்பெறும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு.. முதல்வரின் கடிதத்தை ஏற்று கூட்டமைப்பில் இணைந்த காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.

இதையடுத்து சமூகநீதி காக்க கைகோப்போம் என அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்குக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஏற்று அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களை இன்று நேரில் சந்தித்தார்.

அப்போது, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை சோனியா காந்தியிடம் ஒப்படைத்தார்.

உடனடியாக, அவர் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி அவர்களை நியமித்து, தி.மு.க தலைவர் அவர்களுக்குப் பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இச்சந்திப்பின்போது, ராகுல் காந்தி எம்.பி உடனிருந்தார்.

வலுப்பெறும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு.. முதல்வரின் கடிதத்தை ஏற்று கூட்டமைப்பில் இணைந்த காங்கிரஸ்!

அதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, தி.மு.க தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக - மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து நேரில் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி , சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி அவர்கள் தி.மு.க தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்பினைப் பாராட்டி, இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைந்து வருவது வரவேற்பை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories