மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய மோடி அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.
மருத்துவம் படிக்கத் தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த 4 வருடங்களில் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ உள்ளிட்ட பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மாணவர்களின் உயிரைக் காவு வாங்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மாணவர்களின் மரணங்களை ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த தேர்வு எழுதிய மூன்று மாணவர்கள் தோல்வி பயத்தின் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், அரியலூரைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்த்தவர் கூலித்தொழிலாளியான திருநாவுக்கரசு. இவரது நான்காவது மகள் சௌந்தர்யா. இவர் வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்து மருத்துவம் சேர வேண்டும் என்ற கனவோடு படித்து கடந்த ஞாயிறன்று நடந்த நீட் தேர்வை எழுதியுள்ளார்.
தேர்வை சரியாக எழுத முடியாத காரணத்தினால் வீட்டில் சோகமாக இருந்து வந்ததாகவும், மதிப்பெண் குறையும்பட்சத்தில் தனக்கான மருத்துவ இடஒதுக்கீடு கிடைக்காது என்ற அச்சத்தில் இருந்ததாக பெற்றோர், உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மனநிலையிலிருந்த மாணவி காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென அவருடைய தாயின் புடவையில் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவருடைய பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.