தமிழ்நாடு

“மதுரைக்கு மீண்டும் துரோகம் இழைக்கும் அ.தி.மு.க” : சு.வெங்கடேசன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு!

“துரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள்” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

“மதுரைக்கு மீண்டும் துரோகம் இழைக்கும் அ.தி.மு.க” : சு.வெங்கடேசன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரையில் 70 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு அதற்குரிய பணிகள் நடைபெறத் தொடங்கிய நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் வாழ்ந்த இடத்தில் நூலகம் கட்டுவதாக தவறாகப் பிரச்சாரம் செய்தனர்.

சட்டமன்றத்திலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவறான பிரச்சாரம் செய்வதைச் சுட்டிக்காட்டி, ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்; நிச்சயமாக அதை மாற்றத்தயாராக இருக்கிறோம் என்றார்.

ஆனால், அ.தி.மு.கவினர் அதற்கான ஆதாரத்தைக் காட்டாமல், தொடர்ந்து இதுகுறித்து தவறான தகவலைத் தெரிவித்து வருகின்றனர். ஆய்வாளர்கள் பலரும் பென்னி குக் அந்த வீட்டில் வசித்ததில்லை என சான்றுகளோடு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எழுத்தாளரும், மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கர்னல் ஜான் பென்னி குக் வாழ்ந்த இடம் , எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ, மாற்றவோ கூடாது என்று அ.தி.மு.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழக சட்டமன்றத்திலும் இதே கருத்தை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் பேசினார்.

அப்பொழுது குறுக்கிட்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அந்த கட்டிடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுங்கள். நாங்கள் அதனை பரிசீலிக்கிறோம். அதை விடுத்து ஆதாரமில்லாமல் தவறான பிரச்சாரத்தை செய்யாதீர்கள்” என்று கூறினார்.

இப்பொழுது வரை செல்லூர் ராஜுவோ அவரது கட்சியோ எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவர்களால் எந்த ஆதாரத்தையும் வெளியிட முடியாது. ஏனென்றால் அதில் துளியும் உண்மையில்லை.

பென்னி குக்கின் வாழ்வையும், முல்லை பெரியாறு அணை உருவான விதத்தையும் பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டு, அதனை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதியுள்ள எழுத்தாளன் என்ற முறையில் இரண்டு கருத்துகளை பதிவு செய்கிறேன்.

1. கர்னல் பென்னி குக் மதுரையில் வாழ்ந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை எந்த ஒரு ஆய்வாளராலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த நூலையோ, ஆவணத்தையோ அ.தி.மு.க வெளியிட வேண்டும்.

2. 1895ஆம் ஆண்டு அணை கட்டும் பணி முடிவுற்ற அடுத்த ஆண்டே பென்னிகுக் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்புகிறார். மனைவி மற்றும் ஐந்து பெண் குழந்தைகளுடன் இங்கிலாந்து திரும்பும் அவருக்கு சென்னை கிரிக்கெட் கிளப்பின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டு வழியனுப்பப்படுகிறது. ஏனென்றால் பென்னி குக் சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.

1896 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசிக்கத்துவங்கிய பென்னிகுக் ராயல் இந்தியன் பொறியியற் கல்லூரியின் தலைவராகிறார். மூன்றாண்டுகளுக்குப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்கிறார். பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கை கையாள்வதற்கான ஆலோசனை பெறுவதற்காக அழைக்கப்படுகிறார்.

ஆஸ்திரேலியா சென்று மீண்டும் இங்கிலாந்து திரும்பும் அவர் 1911 ஆம் ஆண்டு கேம்பெர்லி நகரில் மரணமடைகிறார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்.

அவர் இந்தியாவை விட்டு வெளியேறி 17 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அவர் வசித்தார் என்று சொல்வது ஏதாவது பொருத்தப்பாடு உடையதா? கற்பனைக்கும் எட்டாத பொய் அல்லவா?

இடர்மிகு சூழலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்து லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாமனிதனாகப் போற்றப்படும் பென்னிகுக் அவர்களின் புகழை குறுகிய அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்துவது என்ன நியாயம்?

மதுரைக்கும், தென் தமிழகத்து மாணவர்களுக்கும் மிகப்பெரும் பயன்பாட்டினை அளிக்கும் நூலகத்தை பொய்யைச்சொல்லி தடுக்க நினைப்பது என்ன வகை அரசியல்?

மூன்று ஆண்டுகளுக்கு முன் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க அரசு கல்வி மானியக் கோரிக்கையின் போது மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தில் 6 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைப்போம் என்று அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு காற்றோடு போயிற்று. எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.

ஆனால் இன்றோ 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த கையோடு அதனை நடைமுறைப்படுத்த துரிதமான ஆய்வினை பல முறை மேற்கொண்டு இடத்தை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு.

அன்று நூலகத்தை அமைக்காமல் மதுரைக்கு துரோகம் செய்த அ.தி.மு.க, இப்பொழுதோ அமையவிருக்கும் நூலகத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை மதுரைக்கு செய்ய நினைக்கிறது.

துரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories