தமிழ்நாடு

முதலமைச்சர் கடிதம் எதிரொலி... மித்ராவின் உயிர்காக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய அரசு!

குழந்தை மித்ராவின் மருத்துவச் சிகிச்சைக்கான மருந்து இறக்குமதி வரியை ரத்து செய்வதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கடிதம் எதிரொலி... மித்ராவின் உயிர்காக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், பிரியதர்ஷினி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குழந்தை மித்ரா நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் குழந்தை மித்ராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் முதுகுத் தண்டுவட சிதைவு நோயால் மித்ரா பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நோயைக் குணப்படுத்த 16 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் சதீஷ்குமார், பிரியதர்ஷினி தம்பதியிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மித்ராவின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக நன்கொடையாளர்களின் உதவியை நாடினர். மேலும் சமூக வலைத்தளம் வழியாகவும் நிதி திரட்ட முடிவு செய்து, பலரின் உதவிகளை நாடினர். இதையடுத்து குழந்தை மித்ராவின் நிலையை அறிந்து பலரும் வங்கி கணக்கிற்கு நிதி உதவி செய்து வந்தனர். இப்படி பலரின் கூட்டு முயற்சியால் 16 கோடி ரூபாயை திரட்டிவிட்டனர்.

ஆனால் வெளிநாட்டிலிருந்து மருந்து வர வைப்பதால், இதற்கான இறக்குமதி வரியாக 6 கோடி ரூபாய் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதையடுத்து ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி குழந்தை மித்ராவின் பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் " “Spinal Muscular Atrophy என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு அதற்கான மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி - விலை காரணமாகச் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள இடர்களை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவைப்படும் இந்நோயால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 90-100 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அல்லற்படக் கூடாது. மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க - கொள்கை முடிவு எடுக்க வேண்டும்" என ஒன்றிய நிதியமைச்சருக்கான கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குழந்தை மித்ராவின் மருத்துவச் சிகிச்சைக்கான மருந்துக்கான இறக்குமதி வரியை நீக்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானனி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டரில், சிறுமி மித்ராவிற்கான மருத்துவ சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கத்திற்காக இன்று காலை ஒன்றிய நிதியமைச்சரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினேன். அவர் உதவுவதாக தாயுள்ளதுடன் பரிவோடு கூறியுள்ளார்" என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories