தமிழ்நாடு

“அமுத சுரபியாகி மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிரூபித்துள்ளது தி.மு.க அரசு” - வைகோ புகழாரம்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

“அமுத சுரபியாகி மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிரூபித்துள்ளது தி.மு.க அரசு” - வைகோ புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா ஐந்து இலட்சம் வைப்பீடு செய்யப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை குழந்தைக்கு வட்டியுடன் வழங்கப்படும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு காப்பகம் அல்லது விடுதியில் இல்லாமல் உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதம் மூன்றாயிரம் உதவித் தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.

ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா தொற்றால் பெற்றோரில் மற்றொருவரையும் இழந்த குழந்தைகளுக்கும் ஐந்து இலட்சம் ரூபாய் அவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்படும். அரசு நலத்திட்டங்களில் இக்குழந்தைகளுக்கும் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மணிமேகலை காப்பியத்தில், கையில் அமுத சுரபியுடன் காணார், கேளார், பேசார் போன்ற ஆதரவற்றவர்களுக்கு அள்ளி வழங்கியதைப் போல, தமிழக அரசே அமுதசுரபியாக ஆகிவிட்டது. மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிருபித்துள்ளது. மனிதநேயத்தின் மறுபதிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories