தமிழ்நாடு

“ரெம்டெசிவர், ஆக்சிஜனை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும்” - தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

“ரெம்டெசிவர், ஆக்சிஜனை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும்” - தமிழக அரசு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இவர்களை காவல்துறையினர் கைது செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவிலும் இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று எண்ணிக்கையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்களுக்காக அரசு இரவு பகலாகச் செயல்பட்டு வருகிறது.

எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

“ரெம்டெசிவர், ஆக்சிஜனை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும்” - தமிழக அரசு எச்சரிக்கை!

அதேநேரத்தில் சில சமூக விரோதிகள் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.

தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories