தமிழ்நாடு

“10 நாட்களில் 12 யானைகள் கொடூர மரணம்”- ஏன் மௌனம் காக்கின்றன வனத்துறையும் அரசும்?- தங்கம் தென்னரசு கேள்வி!

யானைகளின் தொடர் கொடூர மரணம் குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

“10 நாட்களில் 12 யானைகள் கொடூர மரணம்”- ஏன் மௌனம் காக்கின்றன வனத்துறையும் அரசும்?- தங்கம் தென்னரசு கேள்வி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அண்மையில், கேரள மாநிலத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடியால் கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஆனாலும், தொடர்ந்து யானைகள் கொடூரமாகக் கொல்லப்படுவது தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கோயம்புத்தூர் வனக் கோட்டப் பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் கொல்லப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் கோவை வனக்கோட்ட பகுதியில் 12 யானைகள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யானைகளின் தொடர் கொடூர மரணம் குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தங்கம் தென்னரசு, “கொரோனா கொடுந்தொற்றின் ஊடே ஓசை ஏதுமின்றி கோயம்புத்தூர் வனக் கோட்டப் பகுதியில் கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன.

கடந்த 10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 யானைகள் அங்கே இறந்திருக்கின்றன. ஒவ்வொரு மரணத்தின் காரணமும் அது நடைபெற்ற சூழலைப் பொறுத்து இயற்கையாகவோ அன்றித் திட்டமிட்ட படுகொலையாகவோ அல்லது வேட்டையாகவோ இருக்கக்கூடும்.

ஆனால், ஒரே ஒரு யானையின் மரணமே பல்லுயிர்ச் சூழலில் தாங்கொணாத் தாக்கத்தையும், அளப்பரிய சேதத்தையும் விளைவிக்கக்கூடிய நிலையில், பத்து நாட்களுக்குள்ளாக பன்னிரெண்டு யானைகள் ஒரே வனக் கோட்டத்தில் மரணம் என்பது எளிதாகக் கடந்து போகும் செய்தி அல்ல.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் போட்ஸ்வானா நாட்டில் கொத்துக் கொத்தாக யானைகள் மாண்டுள்ள செய்தி கேட்டு அந்நாட்டு அரசு மட்டுமல்ல; உலகமே அதிர்ச்சியில் இன்று உறைந்து போயிருக்கின்றது.

கொரோனா கொடுந்தொற்றின் ஊடே ஓசை ஏதுமின்றி கோயம்புத்தூர் வனக் கோட்டப் பகுதியில் கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 10...

Posted by Thangam Thenarasu on Friday, 3 July 2020

ஆனால், தமிழகத்தில் நம் கண்ணெதிரே இன்றைக்கு இத்தனை யானைகள் மாண்டு மடிந்தும் தமிழக அரசு இப்போது வரை “யாருக்கு வந்த விருந்தோ” என்ற மனப்பான்மையில் வாளாயிருப்பது ஏன்?

மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கு முக்கியமான சூழல் சமநிலை மற்றும் வளிமண்டல சமன்பாட்டுடன் கூடிய சூழலமைப்பை நிலை நிறுத்தி பராமரிப்பது நமது தமிழகவனத்துறையின் கொள்கை என்று சொல்லிக்கொள்வதில் என்ன பொருள்?

1972 ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டதின் பட்டியல்( I ) கீழ் யானை பாதுகாக்கப்பட்ட உயிரினம் இல்லையா?

தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் என்ன செய்து கொண்டிருக்கின்றார்? இத்தனை யானைகள் பத்து நாட்களுக்குள் இறந்தும் ஏன் இன்னும் உரிய மேல்மட்ட விசாரணைக்கு அவர் உத்தரவிடவில்லை?

தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றார்கள்?

ஏன் இந்த மெளனம்? ஏன் இந்தத் தயக்கம்?

யானைகளின் உயிரென்பதென்ன அவ்வளவு மலிவா?

என்ன செய்வது?

நாட்டிலே மனித உயிர்கள் அடித்துக் கொல்லப்பட்டபோதே அவர்கள் மூச்சுத்திணறி இறந்ததாகச் சொன்ன இந்த அரசிடம் தான், காட்டிலே தங்கள் வாழிடத்திலேயே கேட்பாரற்று வாயில்லாக் காட்டுயிர்கள் பலியாவதற்கும் நியாயம் கேட்க வேண்டி இருக்கின்றது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories