தமிழ்நாடு

“ஃபாத்திமா இறப்பில் முழு விசாரணை தேவை”: ஐ.ஐ.டி மாணவர்கள் இருவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்!

ஃபாத்திமா மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னை ஐ.ஐ.டியில் பயிலும் 2 மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“ஃபாத்திமா இறப்பில் முழு விசாரணை தேவை”: ஐ.ஐ.டி மாணவர்கள் இருவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை ஐ.ஐ.டி-யில் கடந்த வாரம் முதுகலைப் படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் தனது மரணத்திற்கு முக்கிய காரணமாக சுதர்சன் பத்மநாபன் என்கிற பேராசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார். அதனையடுத்து தேசிய குற்றப்பிரிவு போலிஸார் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனாலும், தற்கொலை வழக்கு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தாமல், சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க ஐ.ஐ.டி நிர்வாகம் முயற்சிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் ஃபாத்திமா மரணத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னை ஐ.ஐ.டியில் பயிலும் 2 மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுத் தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெற்று வருகின்றது.

“ஃபாத்திமா இறப்பில் முழு விசாரணை தேவை”: ஐ.ஐ.டி மாணவர்கள் இருவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்!

இதுதொடர்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் கூறுகையில், “தற்கொலையில் ஒருவர் மீது சந்தேகம் இருந்தால் போலிஸார் அவரை கைது செய்துதானே விசாரணை நடத்துவார்கள். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்படும் பேராசிரியரிடமே விசாரணைக்கு அனுமதி கேட்கிறார்கள் போல.

இதுபோல தாமதமான நடவடிக்கை ஐஐடி நிர்வாகத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், கல்லூரி நிர்வாகம் சிலரைப் பாதுகாக்க நினைக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஃபாத்திமா தற்கொலை போன்று இனி தொடராமல் இருக்க, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிந்தா பார் என்ற மற்றொரு மாணவர் அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்கள் மனதளவில் உளச்சலில் உள்ளனர். ஃபாத்திமா இறப்பில் முழு விசாரணை தேவை. இந்த போராட்டம் ஃபாத்திமா இறப்புக்கு மட்டுமல்ல, ஐ.ஐ.டி-யில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்குமானது.

அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை தடுக்கப்படவேண்டும். இனி ஒரு தற்கொலை இங்கு நடக்கக்கூடாது. நிர்வாகம் இது குறித்து உறுதி அளித்தால் மட்டுமே எங்களது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வோம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories