தமிழ்நாடு

ஊரை விட்டு ஓடிய காதல் ஜோடி : காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பெண் வீட்டார்

கடலூர் மாவட்டத்தில் காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிப்போனதில் ஆத்திரமடைந்த காதலியின் குடும்பத்தினர் காதலனின் தாயை கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரை விட்டு ஓடிய காதல் ஜோடி : காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பெண் வீட்டார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்து உள்ள விளங்காட்டூரை சேர்ந்த செல்வி என்பவரின் மகன் பெரியசாமி. அவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த கொளஞ்சி என்பவரின் மகளுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதனிடையே மகளின் காதல் விவகாரம் கொளஞ்சிக்குத் தெரியவந்ததை அடுத்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மேலும் கடந்த மாதம் சென்றவர்கள் இன்னும் ஊர் திரும்பாத நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து பெரியசாமியின் அம்மா செல்வியை மிரட்டி உள்ளனர். பெரியசாமி எங்கிருந்தாலும் தங்களது மகளை இரண்டு நாட்களில் கூட்டி வர வேண்டும் எனவும் கெடு விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு நாட்களில் அவர்கள் வராத நிலையில், பெண்ணின் தந்தை கொளஞ்சி, பெரியசாமி வீட்டுக்கு நேற்றைய தினம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெரியசாமியின் தாயார் செல்வியை அடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து, “ என் மகளை உன் மகன் எங்கு வைத்துள்ளான்?” எனக் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். அதனை அறிந்து வந்த போலீசார் செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின்பு செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், கொளஞ்சியைக் கைது செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories