தமிழ்நாட்டில் பிரபல கோயில்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். இங்கு அமைந்திருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், திடீரென அதற்கு கோவில் தீட்சிதர்கள் கடந்த ஆண்டு அனுமதி மறுத்தனர்.
ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவதால் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்த நிலையில் அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பக்தர்கள் அனைவரும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஆணை வெளியிட்டிருந்த நிலையில், அதையும் தீட்சிதர்கள் ஏற்காமல் இருந்தனர்.
இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யலாம் என கூறியது. மேலும், தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல. அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என விமர்சித்திருந்தது.
இதனிடையே கோவில் நிலத்தை சட்ட விரோதமாக தீட்சிதர்கள் விற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதற்காக ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த ஆதாரங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. மேலும், அறநிலையத்துறை தாக்கல் செய்த ஆதாரங்களில் முகாந்திரம் இருப்பதால், பத்திரப்பதிவுத்துறையிடம் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.