சென்னை காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மதுரை ஆதீனம், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மதுரையில் இருந்து தனது காரில் சென்னை நோக்கி வந்து இருந்தார்.
வரும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகே ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், எந்த காயமுமின்றி அவர் தப்பிய நிலையில்,சைவ சித்தாந்த மாநாட்டில் கார் விபத்து மூலம் தன்னை கொல்ல சதி நடந்ததாக பேசிய மதுரை ஆதீனம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் கூறியிருந்தார். எனினும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, விபத்து தொடர்பான சிசிடிவி ஆதாரத்தையும் வெளியிட்டதில் ஆதினம் பொய் சொன்னது அம்பலமானது.
இந்த நிலையில், மத மோதலை தூண்டும் விதமாக பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆதீன மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும் என இளைய ஆதீனம் ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "மதுரை ஆதீனம் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், ஆதீன மட விவகாரங்களில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும். தற்போதைய ஆதீனம், மடத்தின் ஆதீனம் மரபுகளை பின்பற்றாமலும், முறையாக பூசைகள் செய்யாமலும் இருந்து அரசியல் செய்து வருகிறார்.ஆதீன மடத்தில் அரசியல் கலப்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை தலையிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.