நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒன்றிய அரசு திட்டமிட்டது. இது குறித்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற கூட்டு குழு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை அழைத்திருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மூலம் ஆணையத்துக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கியுள்ளது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும், எதிர்பாராத காரணங்களால் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியாவிட்டால் அதனை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு மசோதா மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அதே போல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக ஒரு மாநிலத்தின் தேர்தலை பல மாதங்களுக்கு ஒத்திவைக்கும் பிரிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக குடியரசு தலைவர் ஆட்சிக்கு வழிவகுப்பதாக உள்ளது என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.