மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது புலனாய்வு அமைப்புகளை வைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் ஒன்றிய அரசு, தங்கள் ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், பாஜக ஆட்சியின் அவலங்களை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் மூத்த பத்திரிக்கையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபர் ஆகியோருக்கு பாஜக ஆளும் அசாம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பாஜக அரசு தேசதுரோக சட்டத்தில் நடவடிக்கை எடுத்த நிலையில், அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, எனினும் தற்போது அதற்கு பதிலாக BNS 152வது பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.