கடந்த ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்தது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.
இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. இதனிடையே நீட் தேர்வு நடைமுறைகளை மாற்றியமைக்கவும், தேசிய தேர்வு முகமையையை சீரமைக்கவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் குழு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு ஏராளமான பரிந்துரைகளை ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகாமைக்கு வழங்கியது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஒரே அமர்வாக நடத்தப்படும் என்றும், ஓ.எம்.ஆர் பேப்பரில் விடைகளை பதிவு செய்யும் வகையில் தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் பெருமளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நிபுணர் குழு, கணினி அடிப்படையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கி இருந்த நிலையில், விடைத்தாள்களில் விடைகளை பதிவு செய்யும் முறையில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இந்த ஆண்டு முதல் ராணுவ மருத்துவமனைகளில் பி.எஸ்சி செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.