ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற நிலையில், சுமார் 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் வெளிநாடு சுற்றுலா பயணிகளும் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 20 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் (G 72) முதலிடம் பிடித்தார்.
14 காளைகளை அடக்கி ஸ்ரீதர் பொதும்பு (P 227) இரண்டாம் இடத்தையும், 10 காளைகளை அடக்கி மடப்புரம் விக்னேஷ் (G 66) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். யாரையும் அருகில் நெருங்க விடாமல் சேலத்தைச் சேர்ந்த பாகுபலி சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த போட்டியில் சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் சிறந்த மாடு பிடி வீரராக தேர்வு செய்யப்பட்டவருக்கு ஷேர்ஆட்டோவும், மூன்றாம் இடம் பிடித்தவர்க்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட்டது.