பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.
அதன்படி இன்று எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்தது. ஆனால் எதிர்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ”இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பத் தயார் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 220 வாக்குகளும், எதிராக 149 வாக்குகளும் கிடைத்தது.